மக்கள் தரிசனம் செய்யப் போகிறார் சரத்குமார்!

திருச்சியில் இன்று சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதற்காக திருச்சி வந்துள்ளார் சரத்குமார். பொதுக்குழுக் கூட்டத்திற்கு முன்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சமத்துவ மக்கள் கட்சியானது மக்கள் நலன், நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் என ஒரு மாற்றத்தை நோக்கி தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கி 7-வது ஆண்டு நடைபெற்று வருகிறது.
கட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் டிசம்பர் மாதம் வடஆற்காடு, தென் ஆற்காடு பகுதியில் தொடங்கி மக்கள் தரிசனம் என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கி நடத்தப்பட உள்ளது. கடை நிலை தொண்டர்களையும் மக்களையும் சந்திக்க உள்ளேன். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் நடைபெறும்.
மக்கள் விரும்பும் போது சமத்துவ மக்கள் கட்சி ஆட்சிக்கு வரும். அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். ஜனவரி மாதம் நெல்லையில் மாநாடு நடைபெறுகிறது.
தற்போது சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் உறுதுணையாக இருந்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற சமத்துவ மக்கள் கட்சி பாடுபடும். ஏற்காடு இடைத் தேர்தலில் பிரசாரம் குறித்து 25-ந்தேதிக்கு பிறகு அறிவிப்போம்.
சமத்துவ மக்கள் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு கேட்பதா என்பது குறித்து தேர்தல் வரும் போது கூட்டணி பற்றி அழைத்து பேசும் சமயத்தில் பேசுவோம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் சிறப்பான, திறமையான ஆட்சியை நடத்தி வருகிறார். தற்போது தமிழ்நாட்டில் திறமையான எதிர்கட்சிகள் இல்லை என்பதை விட சிறப்பான ஆட்சி நடத்தி வருதால் எதிர்கட்சிகளே இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது தான் உண்மை.
அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் தான் தொகுதியில் பணிகள் நடை பெறுகிறது என்பது சரியல்ல. எம்.எல்.ஏக்கள் சிறப்பாக செயல்பட்டால் பணிகள் நடைபெறும்.
கடந்த ஆட்சியில் தொலை நோக்கு திட்டம் இல்லாதது தான் மின்வெட்டு பிரச்சினைக்கு காரணம். ஆனால் முன்பு இருந்த நிலையை விட தமிழ்நாட்டில் தற்போது நல்ல நிலையில் உள்ளது. முதல்வர் ஜெயலலிதா சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். நிர்வாகம் திறமையாக உள்ளது. இதே போன்ற திறமையான நிர்வாகம் திறன் மிகுந்த முதல்வர் ஜெயலலிதா மத்தியில் பிரதமராக வரவேண்டும். அதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
முள்ளிவாய்க்கால் பிரச்சினை குறித்து முழுமையாக நடந்தது தெரியாமல் கருத்து தெரிவிக்க முடியாது. எப்போதும் ஈழத்தமிழர்களுக்கு பாகாப்பாக இருப்பது அதிமுக ஆட்சிதான். 4 முறை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதுகுறித்தும் முதல்வர் கவனத்திற்கு சென்றிருக்கும். ஆனால் திமுக இப்பிரச்சனையில் இரட்டை வேடம் போடுகிறது
கள் இறக்கும் பிரச்சனை குறித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினோம். அரசிடமும் இது குறித்து கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications