அதிமுகவின் அதிகார மையத்திற்கு வரும் சசிகலா: தஞ்சை தொகுதியில் போட்டி?
சென்னை: அதிமுகவில் சசிகலா மீண்டும் அதிகார மையத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தஞ்சாவூர் தொகுதியில் சசிகலா போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2011 சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியை பிடித்த ஜெயலலிதா, சில மாதங்களிலேயே சசிகலாவையும், அவரது உறவினர்களையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். பலர் சிறைக்கும் அனுப்பப்பட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் சசிகலா மீண்டும் போயஸ்கார்டனுக்குள் நுழைந்தார்.
நடந்த முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பல கோவில்களில் சென்று அர்ச்சனை செய்து சிறப்பு பூஜைகள் செய்தார். அதிமுகவில் சசிகலா மீண்டும் அதிகார மையத்திற்குள் வந்திருப்பதாக அப்போதே கூறப்பட்டது.
இதன் ஒரு பகுதியாகவே, தஞ்சாவூர் மாவட்டத்தில், முதலில் வெளியான வேட்பாளர்கள் பட்டியலில் சசிகலா உறவினர்களுடன் தொடர்பில்லாத கட்சியினருக்கே, வாய்ப்பு வழங்கினார் ஜெயலலிதா.
சசிகலாவின் உறவினர்களான திவாகரன், மகாதேவன் ஆகியோருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரிய அளவில் மாற்றம் செய்யும் முயற்சியும் நடந்தது. உடனடியாக, அவர்கள் சசிகலாவிடம் பேசி, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிலரை மாற்றியதாலேயே ஓ.எஸ்.மணியன், எஸ்.காமராஜ், பவுன்ராஜ் போன்றோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூரில் மொத்தம் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியதால் தஞ்சாவூர் தொகுதிக்கான தேர்தல் மே 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மற்ற 7 தொகுதிகளில் அறிவிப்பின் படி,மே 16 தேர்தல் நடத்தப்பட்டது. இதில், திருவிடைமருதூர்,கும்பகோணம், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய 4 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 3தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது.
சட்டசபை தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. தஞ்சாவூர், கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தஞ்சாவூரில் தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் அந்த தொகுதியில் சசிகலா போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே அவர் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்பட்ட நிலையில் வைத்திலிங்கம் நிறுத்தப்பட்டார். ஆனால் அவர் தோல்வியை தழுவினர். இந்த நிலையில் தஞ்சாவூரில் சசிகலா களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இப்படி பேசப்படுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பிரதமரை சந்திக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற ஜெயலலிதா, தன்னுடன் சசிகலாவையும் அழைத்துச் சென்றார் இதுதான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
அதிமுகவில் சசிகலா அதிகார சக்தி என்பதை டெல்லிக்கும் உணர்த்தவே சசிகலாவை ஜெயலலிதா அழைத்துச் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. சசிகலாவிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் பார்த்தால் அவரை அதிகார மையத்தில் முக்கிய இடத்திற்கு கொண்டுவர நடைபெறும் முயற்சியே இது என்று கூறப்படுகிறது.