அலுவலகத்திற்குள் காலெடுத்து வைத்தால் தினகரன் கைதாவாரா?.. பெரும் பரபரப்பில் அதிமுக!
அதிமுக அலுவலகத்துக்குள் காலெடுத்து வைத்தாலே தினகரன் கைது செய்யப்படலாம் என்பதால் அதிமுவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தை ஆகஸ்ட் 5-ந் தேதி தினகரன் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் தலைமை அலுவலகத்தில் தினகரன் கால் வைத்தாலே கைது செய்வதில் போலீஸ் மும்முரமாக இருப்பதாகவும் கூறப்படுவதால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நேரடி யுத்தத்தை தொடங்கத் தயாராகிவிட்டார் தினகரன். திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த தினகரனால் கட்சி அலுவலகத்துக்குள் இன்னமும் நுழைய முடியவில்லை.
ஒட்டுமொத்த ஆட்சி, கட்சியையும் டெல்லி ஆசியுடன் எடப்பாடி தம் வசமாக்கிக் கொண்டார். அதேநேரத்தில் துணைப் பொதுச்செயலர் என கூறிக் கொள்ளும் தினகரனால் கட்சிப் பணி செய்ய முடியாமல் போனது அவரது இமேஜை டேமேஜ் செய்துவிட்டது.
அனுமதி கிடையாது
இதனிடையே தினகரனை கட்சி அலுவலகத்துக்கு வருவதற்காவது அனுமதி கொடுங்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக கேட்டிருக்கிறார் அதிமுக எம்.எல்.ஏ ஒருவர். ஆனால் முதல்வர் எடப்பாடியோ, சசிகலா குடும்பத்துக்கு நான் எந்தத் தீங்கும் செய்யவில்லை. ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களாக ஒதுங்கியிருப்பது நல்லது. தினையளவு அந்தக் குடும்பத்துக்கு ஆதரவு கொடுத்தாலும், மலையளவு தீமை ஏற்படும் என எச்சரித்திருக்கிறார்.
இணைந்த கைகள்
இதன்பின்னர் தஞ்சையில் நடந்த மாமியார் சந்தானலட்சுமியின் துக்க நிகழ்வில் தினகரன் பங்கேற்றார். இந்நிகழ்வுக்கு வந்த திவாகரன், டாக்டர்.வெங்கடேஷ், விவேக் ஜெயராமன் ஆகியோருடன் தினகரன் ஆலோசனை நடத்தினார்.
சசி குடும்பத்துக்கு எச்சரிக்கை
இதற்குப் பின்னர் ஓ.பி.எஸ் எங்கள் பங்காளி என திவாகரன் பேசியதை முதல்வர் எடப்பாடி தரப்பினர் ரசிக்கவில்லை. மேலும் ஆகஸ்ட் 5-ந் தேதியோடு அணிகள் இணைப்புக்கு தினகரன் கொடுத்த கெடு முடிகிறது. இதைப் பற்றி நேற்று பேசிய தினகரன், கட்சி அலுவலகத்துக்கு நான் வருவதை யாராலும் தடுக்க முடியாது. என்னைக் கைது செய்ய வேண்டும் என அமைச்சர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். திகார் சிறையையே பார்த்துவிட்டேன். கைது செய்தால்தான், நாம் வளர முடியும். உண்மையான தொண்டர்களுக்கு நாம் யார் என்பது தெரியும் எனப் பேசியிருக்கிறார். இந்தத் தகவலை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்டு முதல்வர் எடப்பாடி தரப்பும், கட்சி அலுவலகத்துக்குள் தினகரன் நுழைந்துவிடக் கூடாது. நிலைமை விபரீதமாகப் போனால், கட்சி அலுவலகத்துக்கு பூட்டு போடவும் கைது செய்யவும் தயங்க மாட்டோம். உங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வேகப்படுத்தும் வேலையை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டாம் என எச்சரித்துள்ளது.
எடப்பாடி பார்த்து கொள்வார்
சசிகலா குடும்பத்தின் நடவடிக்கைகளை டெல்லி மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அரசியமைப்புச் சட்டரீதியாக முதல்வர் எடப்பாடிக்கு அதிக அதிகாரங்கள் உள்ளன. இந்த விவகாரத்தை சட்டரீதியாகவே அவர் கவனித்துக் கொள்ளட்டும் என பா.ஜ.க மேலிடம் நினைக்கிறது.
எடப்பாடிக்கு எதிராக பிரசாரம்
இன்னொருபக்கம் பா.ஜ.கவை தமிழகத்தில் மலர வைப்பதற்காகத்தான், இத்தனை வேலைகளையும் எடப்பாடி செய்து வருகிறார். அ.தி.மு.கவை அழித்துவிட்டு தாமரையை மலர வைக்க பாடுபடுகிறார். அம்மா வழியிலான அரசு இது அல்ல' எனத் தொண்டர்களிடம் பிரசாரம் செய்யும் வேலைகளையும் முடுக்கிவிட்டிருக்கிறார் தினகரன். பா.ஜ.க எதிர்ப்பு அரசியல்தான் அ.தி.மு.கவையும் காக்கும். நமது குடும்பத்தையும் ஆட்சியில் அமர வைக்கும் எனத் தீர்க்கமாகக் கூறியிருக்கிறார் சசிகலா குடும்பத்து மூத்தவர்.
தினகரன் கைது?
தற்போது மாவட்ட நிர்வாகிகளை ஆகஸ்ட் 5-ந் தேதி சந்திப்பதாக தினகரன் அறிவித்திருக்கிறார். இந்த கூட்டத்தை நடத்தி அதிமுக அலுவலகத்தை கைப்பற்றலாம் என்பது தினகரனின் திட்டம். ஆனால் அலுவலகத்தில் தினகரன் கால் வைத்தாலே கைதுதான் என்கிறது போலீஸ். ஆக மீண்டும் கைது நடவடிக்கைகள், கலவரம் என உட்கட்சி மோதலை சந்திக்க இருக்கிறது அ.தி.மு.க என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.