சசிகலா குடும்பத்துக்கு அதிர்ச்சி கொடுக்கும் நள்ளிரவு சம்பவங்கள்!
சசிகலா குடும்பத்துக்கு அதிர்சசி கொடுக்கும் சம்பவங்கள் நள்ளிரவிலேயே நடைபெற்று வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலாவின் குடும்பத்தினருக்கு நள்ளிரவிலேயே அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றனர். இதனால் சசிகலா குடும்பத்தினருக்கு ஒவ்வொரு நாள் இரவும் பதைபதைப்புடன் செல்கிறது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி இரவு தான் உடல் நலக்குறைவு எனக்கூறி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது.இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 5ஆம் தேதி இரவு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா குடும்பத்தினருக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது.
சசிகல குடும்பத்துக்கு அதிர்ச்சிக் கொடுக்கும் சம்வங்கள் அனைத்தும் நள்ளிரவிலேயே அரங்கேற வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளராக தன்னை நியமித்துக்கொண்ட சசிகலா முதல்வராக ஆசைப்பட்டு அரியணையில் அமர முயன்றார்.

ஓபிஎஸ் தியானம்
இதையடுத்து ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி இரவு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திடீர் தியானம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சசிகலா குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். விடிய விடிய நீடித்த இந்த சம்பவத்தால் தமிழக அரசியல் களத்தில் வரலாறு காணாத பரபரப்பை ஏற்பட்டது. அதுவரை ஆதரவாக இருந்த ஓபிஎஸ் திடீரென எதிராக திரும்பியது சசிகலா குடும்பத்துக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இரட்டை இலை முடக்கம்
இதைத்தொடர்ந்து இரட்டை இலைச்சின்னம் தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 23 தேதி நள்ளிரவில் இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது சசிகலா கொடுக்கப்பட்ட அடுத்த அதிர்ச்சியாக கருதப்பட்டது.

இடைதேர்தல் ரத்து
அடி மேல் அடியாக கடந்த 9ஆம் தேதி நள்ளிரவில் ஆர்கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியதால் தேர்தல் ஆணையம் இந்த அதிரடி முடிவை எடுத்தது. இது சசிகலா தரப்புக்கு பேரிடியாக அமைந்த மூன்றாவது சம்பவம் ஆகும்.

சசிகலா குடும்பம் நீக்கம்
இதைத்தொடர்ந்து கடந்த 18ஆம் தேதி சசிகலா குடும்பத்தினரை நீக்குவதாக எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் அறிவித்தனர். டிடிவி தினகரனால் கட்சிக்கு ஆபத்து என்பதால் அவர்களின் குடும்பம் அதிமுகவில் இருந்து ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இது சசிகலா குடும்பத்துக்கு கொடுக்கப்பட்ட சம்பவம் நான்காவது சம்பவம் ஆகும்.

டிடிவி தினகரன் திடீர் கைது
இந்நிலையில் பேரிடியாக டிடிவி.தினகரன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி.தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஐந்தாவது சம்பவம் ஆகும்.

இரவில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்
அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் துணை பொதுச்செயலாளராக இருந்த டிடிவி தினகரனும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சசிகலா குடும்பதிற்கு அதிர்ச்சி கொடுக்கும் சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நள்ளிரவிலே நடந்தேறுவதால் ஒவ்வொரு இரவும் எப்படி செல்லுமோ என்ற பீதியை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.‘












Click it and Unblock the Notifications