தனிக்கட்சி தொடங்குவதில் தினகரன் மும்முரம்.. புதிய அலுவலகம் தேடுதல் தீவிரம்
தினகரனின் தனிக் கட்சி தொடங்கும் முடிவுக்கு சசிகலா குடும்பமே ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக கட்சி பெயரும் இரட்டை இலை சின்னமும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு கிடைத்துவிடலாம் என்பதால் தினகரன் தனிக்கட்சி தொடங்குவதில் மும்முரமாக இருக்கிறாராம். முதல் கட்டமாக கட்சி அலுவலகத்துக்கான இடத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை கைப்பற்றிவிடலாம் என கணக்குப் போட்டது சசிகலா குடும்பம். ஆனால் டெல்லியின் கடுமையான நெருக்கடியால் சசிகலா தரப்பு கனவு தகர்ந்து போனது.
ஒருகட்டத்தில் தினகரன் அதிமுக துணைப் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டு ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது சசிகலா குடும்பத்துக்கு அதிமுகவை கைப்பற்றிவிடலாம் என்கிற கனவு மீண்டும் துளிர்த்தது.

அதிமுக, இரட்டை இலை யாருக்கு?
ஆனால் தினகரனும் திகார் சிறைவாசம் அனுபவித்து விட்டு வர அதிமுக, முதல்வர் எடப்பாடியார் வசம் போனது. பின்னர் பிரிந்து போன ஓபிஎஸ்-ம் இணைந்து கொண்டார். இதனால் தற்போதைய நிலையில் அதிமுக என்கிற கட்சி பெயரும் இரட்டை இலை சின்னமும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே கிடைக்க வாய்ப்புள்ளது என்றே கூறப்படுகிறது.

தனிக்கட்சியில் தீவிரமான தினகரன்
இதனால் தமது ஆதரவாளர்களைத் தக்க வைக்க சசிகலா குடும்பத்தினர் தனிக்கட்சி தொடங்குவதில் மும்முரமாக உள்ளனர். தொடக்கத்தில் தினகரன் தனக்கு கூடும் கூட்டத்தை வைத்து தனிக்கட்சி தொடங்குவதில் ஆர்வம் காட்டினார். இதற்கு சசிகலா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

தலைமை அலுவலகம் தேடுதல்
தற்போதைய நிலைமைகளை உணர்ந்து கொண்டு சொத்துகளைப் பாதுகாக்க ஒரு கட்சி அவசியம் என்பதை ஒட்டுமொத்த சசிகலா தரப்புமே உணர்ந்திருக்கிறது. இதில் உற்சாகம் அடைந்துள்ள தினகரன், முதல் கட்டமாக கட்சிக்கான தலைமை அலுவகத்துக்கு இடம் தேடுவதில் தீவிரமாக இருக்கிறார்.

கட்சித் தலைவராக காட்ட முயற்சி
சென்னை அடையாறு வீட்டில் தம்மை ஆதரவாளர்கள் சந்திப்பதால் தாம் ஒரு அணித் தலைவர் என்கிற இமேஜ் மட்டுமே இருக்கிறது. தனியே ஒரு அலுவலகத்தை அமைத்துவிட்டால் போகும்போதும் வரும்போதும் கூட்டத்தை காண்பித்து ஒரு கட்சித் தலைவர் என்கிற இமேஜை உருவாக்கிவிடலாம் என்பதுதான் தினகரனின் கணக்காம்.












Click it and Unblock the Notifications