கட்டுச் சோறு கட்டாத குறையாக டெய்லி கூவத்தூர் போகும் சசிகலா.. இன்று 3வது நாள்!
அதிமுக எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டுக்கு மூன்றாவது நாளாக இன்றும் சசிகலா சென்றுள்ளார். போயஸ் தோட்டத்தில் இருந்து சற்று முன் புறப்பட்ட சசிகலா, இன்று என்ன சமாதானம் பேசப
சென்னை: கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ள கோல்டன் பே ரிசார்ட்டுக்கு மூன்றாவது நாளாக சசிகலா இன்றும் சென்றுள்ளார். எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு அவர்கள் மத்தியில் கட்சியின் ஒற்றுமை பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரகாலமாகவே தமிழக அரசியல் களம் படு பரபரப்பாக உள்ளது. தமிழகத்தில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்து கிடக்கிறது. தங்களின் ஆதரவு எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக 90க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கல்பாக்கம் அருகில் உள்ள கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு எம்எல்ஏவிற்கும் அடியாட்கள் காவலில் உள்ளனர். எம்எல்ஏக்களிடம் யாரும் பேசி மனதை மாற்றிவிடக்கூடாது என்பதற்காக அவர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக கூறப்படுகிறது.
போயஸ் தோட்டத்தில் இருந்து நேரடியாகவே கூவத்தூர் சென்று கடந்த இரு தினங்களாக எம்எல்ஏக்களிடம் பேசினார் சசிகலா. நாமெல்லாம் ஒரே குடும்பம், நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது என்று கூறினார். நான் யாருக்கும் பயப்படமாட்டேன். முதல்வராக பதவியேற்கும் முடிவில் இருந்து ஒருபோதும் பின் வாங்கப்போவதில்லை என்றும் சசிகலா கூறினார். செய்தியாளர்களிடமும் பேசினார்.
கூவத்தூர் பயணம்
இந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் சசிகலா கூவத்தூர் சென்றுள்ளார். இன்றும் எம்எல்ஏக்களிடம் சசிகலா ஆலோசனை நடத்துவார் என்றும் உயிரைக் கொடுத்தாவது கட்சியையும், ஆட்சியையும் காப்பேன் என்றும் சென்டிமென்ட் ஆக பேசி பலரது மனதை கரைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்ன பேசப்போகிறார்
கூவத்தூருக்கு சற்று முன் புறப்பட்ட சசிகலா என்ன பேசப்போகிறார் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களாக எம்எல்ஏக்களிடம் பேசி பேசி மனதை கரைத்து வருகிறார். இன்றும் ஏதாவது கண்ணீர் வர பேசுவார் என்று எதிர்பார்க்கலாம்.
சசிகலாவின் நிலை
சட்டசபைக்குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டு 8 நாட்களாகி விட்டன. ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியும் 5 நாட்களுக்கு மேலாகிவிட்டது. தனியாக விளக்கம் அளிக்க ஆளுநருக்கு கடிதம் எழுதியும் 40 மணி நேரங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னமும் எந்த பதிலும் ஆளுநரிடம் இருந்து வரவில்லை. இன்று ஆளுநரிடம் இருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கிறார் சசிகலா. அவ்வாறு வரும் பட்சத்தில் எம்எல்ஏக்களை நன்றாக டியூன் செய்து அழைத்து வருவார் என்றும் அதற்காகவே மீண்டும் கூவத்தூர் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
6வது நாளாக சிறை
அதிமுக எம்எல்ஏக்கள் கடந்த 6வது நாட்களாக சிறைவைக்கப்பட்டுள்ளனர். தண்ணீர்கள் சூழ்ந்த தீவு போன்ற ரிசார்ட்டில் அடியாட்கள் புடைசூழ அவ்வப்போது சில எம்எல்ஏக்கள் ஆட்டம் போட்டு பொழுதை போக்கி வருகின்றனர் . அவர்களுக்கு ஓட்டுப்போட்ட மக்களோ எங்க எம்எல்ஏவைக் காணோம் என்று புகார் அளித்து வருகின்றனர். ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தால் மட்டுமே எம்எல்ஏக்களுக்கு சிறையில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.