'சிறை' வைத்துள்ள எம்எல்ஏக்களுடன் ஆலோசனையை முடித்தார் சசிகலா.. நடந்தது என்ன?
சசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் ரிசார்ட்டில் உள்ள அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்தார்.
சென்னை: சசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூரில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை சந்தித்தார். சுமார் ஒன்றரை மணி நேர ஆலோசனைக்கு பிறகு அவர் சென்னை புறப்பட்டார்.
அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.
இதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசும் போது எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றார். எம்.எல்.ஏ.,க்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று அவர் முன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் சசிகலா திட்டமிட்டதாக கூறப்பட்டது.
மேலும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என அவர் கெஞ்சியதாகவும் கூறப்பட்டது. மேலும் எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை இரண்டாவது நாளாக சசிகலா இன்று சந்தித்தார். அவர் அங்குள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் ஒன்றரை மணிநேரம் ஆலோசனைக்கு பிறகு அவர் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டார்.
நேற்று எச்சரித்ததுப் போன்ற போராட்டங்களை கையிலெடுக்கவும் சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எம்எல்ஏக்களை தூண்டி விட்டு போராட்டத்தை தொடங்குவது குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.