20 ஆண்டுகளாக சசிகலாவால் தமிழகத்திற்குக் கிடைத்தது.. வெறும் அவமானங்கள் மட்டுமே!
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுடன் சேர்ந்து 1997ல் உச்சரிக்கப்பட்ட சசிகலா பெயர், 2017லிலும் பரப்பன அஹ்க்ரஹாரா சிறையில் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, இந்திய அளவில் தமிழகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுப்பவராகவே இருக்கிறார்.
ஜெயலலிதாவுடன் சசிகலா 33 வருடங்கள் தோழியாகவும், உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது போல சதித்திட்டம் தீட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவராக இருந்தாலும், 1996ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதானதில் இருந்து சசிகலா தான் ஜெயலலிதா; ஜெயலலிதா தான் சசிகலா என்ற பிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது.
ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பு சசிகலா அவ்வளவு தூரம் அறியப்படும் பெயராகவும் நபராகவும் இருந்தது இல்லை. ஆனால், 1991ல் ஜெயலலிதா பதவியேற்றதும் சட்டசபைக்கே சசிகலாவை அழைத்து வந்தபோதுதான், ஜெயலலிதாவும் சசிகலாவும் வேறுவேறு அல்ல என்பதை அதிமுக அடிமட்ட தொண்டர்கள் புரிந்துகொண்டார்கள்.
அதன் விளைவாக ஜெயலலிதாவிடம் சொல்ல வேண்டிய விஷயங்களை, சசிகலாவின் மூலமாகச் சொன்னார்கள். சசிகலா தான் எல்லாம் என ஆன நிலையில், அதிமுக என்ற கட்சியின் அனைத்து கிளை வேர்களிலும் தன் ரத்த உறவுகள் இருக்க வேண்டும் என சசிகலா உறுதிபூண்டார். விளைவு டி.டி.வி. தினகரன், டாக்டர் வெங்கடேஷ், மகாதேவன் ஆகிய மூவரும் நேரடி அரசியலில் இறங்கினார்கள். ஆனால் சசிகலாவின் அனைத்து உறவுகளும் அதிமுகவை இயக்கும் பல்முனை சக்கரங்களாக இருந்தனர்.
மாகமகம்... மகா தவறு!
1992 பிப்ரவரி 18ஆம் நாள் ஜெயலலிதாவும் சசிகலாவும் கும்பகோணம் மகாமகத்தில் புனித நீராட வந்தனர். அதற்காக அங்கு ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஜெயலலிதாவுக்கு தலையில் சசிகலா புனித நீரை ஊற்றியதைப் பார்த்த மக்கள் ஜெயலிதாவுக்கு எல்லாமும் சசிகலா என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துகொண்டார்கள். ஜெயலலிதாவைப் பார்க்க கூட்டம் முண்டியடித்ததில் 50க்கும் மேற்பட்ட மக்கள் மாண்டு போயினர். ஆனால் ஜெயலலிதாவும் சசிகலாவும் மரித்தவர்களையும் காயமடைந்தவர்களையும் சென்று பார்க்கவே இல்லை. அன்று ஜெயலலிதாவோடு சேர்ந்து சசிகலாவும் கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.
திருமணமா... திருவிழாவா?
ஜெயலலிதா எங்கள் உறவு... ஜெயலலிதாவுக்கு நாங்கள் தான் அனைத்தும் என்று நிரூபிக்க தன் அக்கா மகன் சுதாகரனை ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் ஆக்கினார் சசிகலா. அதோடு நில்லாமல் சுதாகரனுக்கு 1995ல் மொத்த இந்தியாவும் அதிரும் வகையில் ஆடம்பரத் திருமணத்தை நடத்தினார். அந்த காலக்கட்டத்தில் மிக அதிக பொருட்செலவுடன், அதாவது 6.16 கோடி ரூபாய் செலவுல் நடத்தப்பட்ட திருமணம் இதுதான். இந்த திருமணத்தில் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டார்கள். இந்த திருமணத்தின் மூலம் தான் ஜெயலலிதா என்கிற முதல்வரின் ஆடம்பரமும் சசிகலா என்கிற அவரது தோழியின் உச்சபட்ச அகம்பாவமும் வெளி உலகுக்கு தெரிய வந்தது.
ஆடம்பரம் அம்பலம்
ஜெயலலிதா 1991-96 ஆம் ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த போது செய்த மகா தவறுகளால் அடுத்து வந்த தேர்தலில் மோசமான தோல்வியைத் தழுவினார். ஆனால் அடுத்து, 1996 ஜூன் 14ஆம் தேதி வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக அப்போதைய ஜனதா தள தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஜெயலலிதா மீது வழக்குத் தொடர்ந்தார். அதன்பிறகு கலர் டிவி வழக்கில் போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது, மொத்த இந்தியாவும் அதிர்ந்தது. இரண்டு பெண்கள் இத்தனை ஆடம்பரமாக வாழ முடியுமா என மொத்த உலகமும் கொதித்தது.
வழக்குக்குப் பிறகு தொடர்ந்த ஆட்டம்!
இப்படி தொடர்ச்சியாக ஜெயலலிதாவுடன் இணைந்து சசிகலா தமிழகத்தின் பெயரை இந்திய அளவில் நாறடித்தார் என்றுதான் கூற வேண்டும். வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்தார் என்று வழக்கு நடந்துகொண்டிருந்த போதும் தமிழகமெங்கும் பல ஆயிரம் ஏக்கர் நிலம், ஜெயா தொலைக்காட்சி, ஜெயா பப்ளிகேஷன், மிடாஸ் சாராய ஆலை என பல ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து சேர்த்தார் சசிகலா. சசிகலா என்றில்லாமல், அவரது உறவினர்கள் அனைவரும் இன்று பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதிகளாக, உலகமெங்கும் பல்வேறு வியாபாரங்களைச் செய்பவர்களாக இருக்கிறார்கள்.
Recommended Video
ஜெயலலிதா சிறையில்... சசிகலா வியாபாரத்தில்
ஜெயலலிதா நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பால், தண்டனை அனுபவித்துக்கொண்டு பரப்பரன அஹ்ரஹாரா சிறையில் இருந்த காலகட்டத்தில் தான் இளவரசி மகன் தீபக் 'நலனுக்காக' ஜாஸ் சினிமாஸ் என்னும் மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களை ஆயிரம் கோடிக்கு வாங்கினார்கள் என்று மீடியாக்களில் செய்தி வந்தபோதும் சசிகலா அசரவில்லை.
சசிகலா Vs சசிகலா புஷ்பா
சசிகலா எதற்கும் அஞ்சாதவர்; அடாவடியானவர் என்கிற பிம்பம் சசிகலா புஷ்பா எம்.பி மூலம் வெளியுலகுக்கு தெரிய வந்தது. சசிகலாவும் ஜெயலலிதாவும் தன்னைத் தாக்கினார்கள் என சசிகலா புஷ்பா எம்.பி ராஜ்யசபாவில் கண்ணீரூம் கம்பலையுமாகக் கூறினார். அப்போது சசிகலா ஒரு அராஜகவாதி என்பதை நாடு முழுவதும் மீடியா கொண்டு சேர்த்தது.
ஜெயலலிதா மர்ம மரணம்
அதன்பிறகு ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து, டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடையும்வரை மருத்துவமனையில் யாரையுமே பார்க்க சசிகலா அனுமதிக்க வில்லை. இன்றளவும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது, சசிகலாவுக்கு அதில் தொடர்பிருக்கிறது என்பதை எல்லா இடங்களிலும் விவாதித்து வருகின்றனர். ஆனால், சசிகலா அதுகுறித்து பேசுவதாகவே இல்லை.
ஜெயலலிதாவுக்கு டூப்?
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு எழுந்த அதிகாரப் போட்டியில் அனைத்து அதிமுகவினரையும் தன்னை சின்னம்மா என்று அழைக்க வைத்தார். அனைத்து மீடியாவையும் தன்னை வந்து பார்க்க வைத்தார். அதிமுகவின் சட்டங்களை மீறி, பொதுச்செயலாளர் ஆனார். ஜெயலிதாவுக்கு டூப் போட்டது போல தன் அலங்காரத்தை நடை, உடை, பாவனையை மாற்றிக்கொண்டார்.
மிரட்டிய கூவத்தூர் நாடகம்
அதன்பிறகு, கூவத்தூரில் 122 எம்.எல்.ஏக்களையும் அடைத்து வைத்து பேரம் பேசி பழம்பெரும் அரசியல்வாதிகளையே நடுங்க வைத்தார். அப்போது அவர் மீடியாவுக்கு அளித்த டெரர் பேட்டிகள், இவர் ஒரு அடியாள் என்பதை நிரூபணம் செய்வதகவே இருந்தது.நாங்கள் சென்ட்ரல் ஜெயிலையும் பார்த்தவர்கள், பெங்களூரு ஜெயிலையும் பார்த்தவர்களே என சிறைக்கு செல்லும் முன்பாக கூறியது 'அய்யோ..இவர் என்ன மாதிரியான ஆள்' என அனைவரையும் கூசச் செய்தது.
சசிகலா சபதம்
சிறைக்குப் போகும் போதும் சும்மா போனாரா..! ஜெயலலிதா நினவிடத்தில் ஓங்கியடித்து சத்தியம் செய்த காட்சி இன்றும் அச்சுறுத்துவதாகவே இருக்கிறது. மிரட்டும் கண்களும் ஆங்காரம் நிறைந்த சத்தியமும் காலத்தால் அழியாத காட்சியாக உறைந்து நிற்கிறது.
சிறக்குச் சென்ற 5 மாதங்களில்....
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றார் சசிகலா. 5 மாதங்களில் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தார், 5 அறைகளில் சுகபோக வாழ்க்கை வாழ்கிறார் என ஆதரங்களுடன் குற்ற்ச்சாட்டுகள் வந்துவிட்டன. 1991-ல் ஆரம்பித்த சசிகலாவின் பண விளையாட்டு 2017ஆம் ஆண்டு வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த இருபது ஆண்டுகளில் தமிழகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தித் தந்தவர்களில் முதன்மையானவராக சசிகலா இருக்கிறார் என்பதுதான் வரலாறு.