சிறைக்கு போனாலும் சசிகலா திருந்தவே மாட்டார்... ஜி. ராமகிருஷ்ணன் சுளீர்
பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா, திருந்தவே மாட்டார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வாழ்க்கை வசதிகள் கொடுக்க சிறைத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளதற்கு ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ' சசிகலா திருந்தவே மாட்டார் என்பதற்கு இதுதான் உதாரணம்' என்று தெரிவித்தார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையின் சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா, கடந்த வாரம் அச்சிறையில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடந்த முறைகேடுகள் குறித்து அவருக்கு தெரிய வந்தது. பின்னர் அது தொடர்பாக அவர் மேல் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். சிறையில் வசதிகளை கொடுக்க சசிகலாவிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது என்றும் புகாரில் ரூபா கூறி அதிர வைத்திருந்தார்.
நாடு முழுவதும் பெரிய அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் இன்று இன்னொரு கட்டத்தை அடைந்துள்ளது. புகார் கூறிய டிஐஜி ரூபா பணி இடமாற்றம் செய்யப்பட்டார். சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், டிஐஜி ரூபா கூறிய புகாருக்கு வலு சேர்க்கும் வகையில் சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பது ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. சசிகலா சொகுசாக இருக்கும் சிறை அறைகளின் படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், "தமிழக அரசியல் உலகை ஊழல் மயமாக்கிய குடும்பம் சசிகலா குடும்பம். அதை இப்போது மீண்டும் அவர் நிரூபித்து உள்ளார்.
பொதுவாக தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலத்திலும் கையூட்டு பெற்றுக் கொண்டு சிறை அதிகாரிகள் செயல்படுவது வழக்கமாக உள்ளது. அது பெங்களூருவிலும் நடந்துள்ளது. எனவே, இதற்கு உடைந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறு செய்துவிட்டு தண்டனை பெரும் நிலையில், சசிகலா மேலும் மேலும் குற்றம் செய்கிறார். இந்த தவறுகள் மீதும் சட்ட ரீதியிலான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று சசிகலா செயல்படுவதற்கு அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.