"பேஸ்மென்ட்" காலி.. அடுத்து "பில்டிங்"குக்காக முட்டி மோதும் ஓபிஎஸ், சசி அண்ட் கோ!
அதிமுகவின் டிரேட் மார்க்கான இரட்டை இலையையே முடங்கி விட்ட நிலையில் தற்போது கட்சி அலுவலகத்தை கைப்பற்றும் போட்டியில் ஓபிஎஸ் அணியினரும், சசிகலா தரப்பும் குதித்துள்ளனர்.
சென்னை: பதவி, அதிகாரப் போட்டியில் இரு பிரிவாக பிரிந்து அதன் விளைவாக, இரட்டை இலையையும் இழந்து விட்ட நிலையில், தற்போது எஞ்சியுள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்துக்கு சொந்தம் கொண்டாடி புதிய மோதலில் குதித்துள்ளனர் ஓபிஎஸ் தரப்பும், சசிகலா குரூப்பும்.
ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுக ராணுவ கட்டுக்கோப்புடன் இருந்தது. "அம்மா"வின் கண்ணசைவுக்கு அனைவரும் கட்டுப்பட்டனர். அவர் மறைவுக்கு பிறகு சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாத சிலர், தீபாவின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
பலர் ஓ.பி.எஸ். பக்கம் திரும்பினர். சசிகலா ஆட்சியை பிடிக்க முயன்றபோது அது பிடிக்காமல் சசிகலாவுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஓ.பன்னீர் செல்வம் வெகுண்டு வெளியே வந்ததால் அவரும் தலைவரானார்.
இடைத்தேர்தல்
இந்நிலையில் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகருக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. சசிகலா அணி சார்பில் தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி நடந்த போட்டியில் தேர்தல் ஆணையம் அதிமுக சின்னத்தை முடக்கி விட்டது.
2வது முறையாக
எம்ஜிஆர் மறைந்த பிறகு கடந்த 1989-ல் அதிமுக ஜெ.அணி, ஜா. அணி என இரண்டாக பிளவுபட்டது. அப்போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜெயலலிதாவும், வி.என்.ஜானகியும் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டனர். அதே நிலை தற்போது நிகழ்ந்துள்ளது.
நீயா? நானா? போட்டி
மக்கள் மனதில் எம்ஜிஆர், அதிமுக, ஜெயலலிதா ஆகிய 3 மட்டுமே அழிக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளனர். அதில் 2 சகாப்தங்கள் முடிந்து போய் விட்டனர். மிச்சமிருப்பது அதிமுகதான். அதுவும் தற்போது குத்துயிரும் குலையுயிருமாக உள்ளது. இரட்டை இலை சின்னத்தை நீயா நானா போட்டியில் முடக்கிவிட்டனர்.
தலைமை அலுவலகத்தை...
இந்நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற இரு அணிகளும் ஆயத்தமாகி வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்ற முறையில் கட்சி அலுவலகத்தை தாங்கள் பயன்படுத்துவோம் என்று சசி தரப்பும், பொதுச் செயலாளர் பதவியே செல்லாது என்ற நிலையில் அந்த அலுவலகம் தங்களுக்கே சொந்தம் என்று ஓபிஎஸ் அணியினரும் சசி தரப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
வரலாறு திரும்புகிறது
ராயப்பேட்டையில் எம்ஜிஆருக்கு தனக்குச் சொந்தமான கட்டடத்தை கட்சி அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் அவரது மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுப்பட்ட போது, கட்சி அலுவலகம் யாருக்கு என்ற போட்டியில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதைத் தொடர்ந்து கட்சி பெரிதா, அலுவலகம் பெரிதா என்று எண்ணிய ஜானகி, கட்சியே பெரிது என்று கருதி அலுவலகத்தை ஜெயலலிதா அணிக்கு விட்டுக் கொடுத்தார்.
நீதிமன்றத்தில் வென்ற ஜெ.
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவராக இருக்கும் திருநாவுக்கரசு கடந்த 1990-ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து பிரிந்து செல்லும்போது கட்சி அலுவலகத்துக்கு சொந்தம் கொண்டாடிய பிரச்சினையில் இரண்டு முறை நீதிமன்றத்துக்கு சென்று கட்சி அலுவலகத்தை ஜெயலலிதா மீட்டார்.
மீண்டும் போட்டி
அன்று ஜெயலலிதாவுக்கும், ஜானகிக்கும் ஏற்பட்ட பிரச்சினை போல் இன்று ஓ.பன்னீர் செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் போட்டி உருவாகியுள்ளது. இதில் சின்னத்தை இரு பிரிவினருமே இழந்துவிட்டனர். அடுத்து கட்சி அலுவலகம் களத்திற்கு வந்துள்ளது. இரட்டை இலையும், அதிமுக என்ற பெயரும்தான் கட்சியின் பேஸ்மென்ட் போல. அதையே தகர்த்து விட்டனர், சாதாரண கட்டடத்திற்காக போட்டி கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.