போயஸ் கார்டன் பங்களாவுக்குள் என்னை நுழைய விடாமல் தடுத்ததே சசிகலாதான் - தீபா பகிரங்க குற்றச்சாட்டு
அத்தையிடம் எங்களின் குடும்பத்தைப் பற்றி தவறாக சொல்லிக் கொடுத்து பிரித்து விட்டார் சசிகலா என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை போயஸ் கார்டன் இல்லத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கிறார் சசிகலா என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த இடைவெளி ஏன் ஏற்பட்டது. எத்தனை ஆண்டுகளாக இந்த இடைவெளி உள்ளது என்று தந்தி டிவியில் அளித்த பேட்டியில் பதிவு செய்தார் தீபா.
கடந்த 2001ம் ஆண்டு அத்தை மீண்டும் முதல்வர் ஆன பின்னர் போயஸ் தோட்டத்திற்கு சென்று பேசினோம். 2002ம் ஆண்டு நேரில் சென்றோம். அத்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினோம்.

2004ம் ஆண்டு போயஸ் தோட்ட வீட்டிற்கு சென்று நேரடியாக சென்னை அத்தையை கடைசியாக பார்த்தோம். அதன்பிறகு சிறிய இடைவெளி ஏற்பட்டது. 2007ம் ஆண்டு போயஸ் தோட்ட வீட்டிற்கு சென்று தொலைபேசியில் இன்டர்காம் மூலம் மட்டுமே பேசினேன்.
எங்களை போயஸ் தோட்ட சாலைக்குள் அனுமதிக்கவே மறுத்தனர். அதற்குக் காரணம் அவருடன் இருந்தவர்கள்தான். 2010ம் ஆண்டு வெளிநாடு படிக்க சென்று விட்டேன். 2011ம் ஆண்டு அனைவரும் போயஸ் தோட்ட இல்லத்தை விட்டு விரட்டப்பட்டதாக கேள்விப்பட்டு சென்னைக்கு வந்தேன். ஆனால் அவர்கள் மீண்டும் அத்தை வீட்டிற்குள் வந்து விட்டார்கள்.
எங்கள் குடும்பத்தினரை அத்தையிடம் இருந்து பிரித்து விட்டனர். 2007ம் ஆண்டில் இருந்து அத்தையை நேரடியாக பார்க்க முடியவில்லை அதற்குக் காரணம் அவருடன் இருந்தவர்கள்தான் என்று குற்றம் சாட்டியுள்ளார் ஜெ. தீபா.












Click it and Unblock the Notifications