சிவாஜி சிலையை அகற்ற 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்
சென்னை: மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளதாகக் கூறப்படும் நடிகர் சிவாஜியின் சிலை எப்போது அகற்றப்படும் என்று இன்னும் ஒரு வாரத்தில் உறுதியான பதிலைத் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சிலையை அகற்ற 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்குமாறு தமிழக அரசு விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
சிவாஜி சிலையை அகற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சிலையை உடனடியாக அகற்ற தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில், விரைவில் சிவாஜி மணிமண்டபம் கட்டப்பட உள்ளதாகவும், அதை கட்டிய பிறகு இந்த சிலையை அகற்றி அங்கு வைக்க இருப்பதாகவும், எனவே சிவாஜி சிலையை அகற்ற 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்குமாறு தமிழக அரசு கோரியிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க மறுத்ததோடு, சிவாஜி சிலை எப்போது அகற்றப்படும் என்பதை இன்னும் ஒரு வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.