ஜல்லி கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை – கறுப்புக்கொடி ஏற்றி துக்கம் அனுஷ்டித்த வீரர்கள்
மதுரை: சங்க காலம் தொட்டு தமிழகத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை தடைவிதித்துள்ளது. இது தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்தப்படும் வாடிவாசல் பகுதியில் கறுப்புகொடி ஏற்றி வீரர்கள் துக்கம் அனுஷ்டித்தனர்.
ஜல்லி கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதால் அதற்கு தடை விதிப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால் தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

பாரம்பரிய விளையாட்டுக்கள்
தமிழர்களின் பரம்பாரிய வீர விளையாட்டுகளில் பல உள்ளன. அவற்றில் சிலம்பம், சுருள் வாள் வீச்சு, களரி, ஏறு தழுவல் (ஜல்லி கட்டு) மாப்பிள்ளை கல் தூக்குதல் (இளவட்ட கல்), தனியாக வருபவரை மடக்கி பிடிக்கும் குழு விளையாட்டு (கபடி) பனை மரத்தின் உச்சியில் கட்டப்பட்ட பரிசை தட்டி செல்லல் (வழுக்கு மரம் ஏறுதல்) போன்ற வீர விளையாட்டுகள் புகழ் பெற்றவை. இவற்றில் அறிவை மட்டுமே உபயோகித்து வெல்வது முடியாத காரியம். உடல் பலமும் அவசியம்
ஏறுதழுவுதல்
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் முக்கியமானது ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை மற்றும் கோயில் திருவிழாக்களில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்கள்
தென்மாவட்டங்களில் இந்த ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலம். மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்கள் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு மிகவும் பெயர் பெற்ற மாவட்டங்களாகும்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
தை திருநாளை ஒட்டி மதுரையை சுற்றியுள்ள அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப்போட்டியைக் காண வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
காளையை அடக்கினால் பரிசு
காளையை அடக்கும் காளைக்குத்தான் எனது மகளை திருமணம் செய்து வைப்பேன் என்றெல்லாம் அந்தக் காலத்தில் தமிழர்கள் கூறி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தியது உண்டு.
தங்கம் பரிசு
இன்றைய கால கட்டத்தில் காளையை அடக்கும் தங்கக் காசு முதல் சில்வர் அண்டா, சைக்கிள், மோட்டார் சைக்கிள் என வசதிக்கு ஏற்ப பரிசு வழங்கப்படுகிறது.
விலங்குகள் நல அமைப்பு
இந்த நிலையில பிராணிகள் நல அமைப்பு ஜல்லி கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக புகார் தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில் காளைகள் முகத்தில் மிளகாய் பொடி துவுகின்றனர். சித்ரவதை செய்கின்றனர் என கூறப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் ஜல்லிகட்டுக்கு தமிழக அரசின் சட்ட அங்கிகாரம் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.
கலெக்டர் அனுமதியோடு போட்டி
தமிழக அரசு தனி சட்டம் இயற்றி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதன் பிறகு வழக்கு முடியும் வரை கடும் நிபந்தனைகளுடன் கலெக்டர் அனுமதி பெற்று ஜல்லி கட்டை நடத்தலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பல்வேறு இடஞ்சல்களை தாண்டி தமிழர்களின் வீரவிளையாட்டியான ஜல்லிகட்டு மாவட்ட நிர்வாகத்தால் நீதிமன்ற நிபந்தனைபடி நடத்தப்பட்டு வருகிறது. இதை விலங்குகள் நல வாரியத்தினர் கண்காணித்து வந்தனர்.
அதிர்ச்சியில் ஆர்வலர்கள்
இப்படி பராம்பாரியம் மிக்க விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் திடீரென தடை விதித்ததால் தென் மாவட்ட மக்களிடமும், ஜல்லி கட்டு ஆர்வலர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என்று தெரிகிறது.
நோய் பாதிப்பு
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் பெரிதும் பாதிக்கப்பட போவது, தென்மாவட்டத்தில் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்தான். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கடந்த காலங்களில் சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடத்தாமல் இருந்தனர். அப்போது கிராமத்தில் நோய் பாதிப்பால் ஏராளமானோர் இறந்தனர். அதை தெய்வ குற்றம் என நினைத்த கிராம மக்கள் மீண்டும் ஜல்லிக்கட்டை நடத்தினர்.
கறுப்புக் கொடி
தற்போது உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையால், கிராமத்தில் தெய்வ குற்றம் நிகழுமோ என அச்சத்தில் உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக வாடிவாசல் பகுதியில் கறுப்புக்கொடி ஏற்றி துக்கம் அனுஷ்டிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications