மார்க் கம்மி... பெற்றோருக்கு பயந்து காரில் கடத்த முயன்றதாக நாடகம் ஆடிய சிறுமிகள்!
சென்னை: தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால், பெற்றோர் திட்டுவர் எனப்பயந்து, காரில் தங்களைக் கடத்த முயன்றதாக பள்ளிச் சிறுமிகள் நாடகம் ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, நீலாங்கரைப் பகுதியில் வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் மோகன். இவருக்கு முறையே ஆறாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். வழக்கம் போல நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற சகோதரிகள், அக்கரை பேருந்து நிறுத்தம் அருகே கார் ஒன்றில் லிப்ட் கேட்டதாகவும், ஆனால், அந்தக் காரின் டிரைவரோ வண்டியை நிறுத்தாமல் சிறுமிகளை கடத்த முற்பட்டதாகவும் கூறப்பட்டது.
பின்னர், சிறுமிகளின் கூச்சல் சத்தத்திற்குப் பயந்து அவர்களைப் பாதி வழியில் இறக்கி விட்டதாகவும் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் பள்ளிச் சிறுமிகள் இருவரை காரில் கடத்த முயன்றதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. பெற்றோர்கள் பீதி அடைந்தனர்.
இது தொடர்பாக நீலாங்கரைப் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், சிறுமிகள் அளித்த தகவல்களின் படி கடத்த முயன்ற கார் டிரைவரின் தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கினர். ஆனால், அப்படி ஒரு சம்பவம் எதுவும் நடந்ததற்கான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை.
எனவே, இது தொடர்பாக மீண்டும் சிறுமிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிகளின் பேச்சில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொண்டு நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
அதாவது, பள்ளித் தேர்வில் சகோதரிகள் இருவரும் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனால் பெற்றோரை அழைத்து வரும்படி ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தை வீட்டில் சொன்னால் பெற்றோர் அடிப்பார்கள் என அஞ்சிய சிறுமிகள், புரசைவாக்கத்தில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு செல்ல அக்கரையில் இருந்து பேருந்தில் ஏறியுள்ளனர்.
அப்போது அந்தப் பேருந்தில் சிறுமிகளின் உறவினர் ஒருவர் இருந்துள்ளார். இதனால் அவர்கள் நீலாங்கரையில் இறங்கியுள்ளனர். மேலும், காரில் கடத்தப்பட்டதாகப் பொய்யான தகவலைக்கூறி பெற்றோரை அவர்கள் திசை திருப்பியுள்ளனர்.
சிறுமியரின் இந்த திட்டத்தை கண்டுபிடித்த போலீசார், அவர்களுக்கு அறிவுரை கூறி எச்சரித்துப் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.