திருச்செந்தூரில் அய்யாகண்ணு-பாஜக பெண் நிர்வாகி மோதல்.. தப்பு யார் மீது?
Recommended Video
திருச்செந்தூர்: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணு, பாஜக பெண்- நிர்வாகி நெல்லையம்மாள் கன்னத்தில் அறைந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இரு தரப்பில் யார் மீது தவறு என்ற வாத, விவாதங்கள் சோஷியல் மீடியாவில் கொடிகட்டி பறக்கின்றன. நெல்லையம்மாள், வயது முதிர்ந்த அய்யாகண்ணுவை அடித்தது தப்பு என்று ஒரு தரப்பினரும், அடிக்க தூண்டும் அளவுக்கு அந்த பெண்ணை மோசமான வார்த்தையில் அய்யாகண்ணு பேசியுள்ளார் என்பது மற்றொரு தரப்பு வாதம்.
இரு தரப்பிலுமே என்ன தவறுகள் நிகழ்ந்துள்ளன என்பதை வீடியோவை நன்கு உற்று பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
நடை பிரச்சாரம்
விவசாயிகள் பிரச்சினைக்காக டெல்லியில், பிரதமர் மோடியை சந்திக்க வலியுறுத்தி, நீண்ட நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தினார். ஆனால், மோடி இவரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இந்தநிலையில், விவசாயிகள் பிரச்சினையை பற்றி எடுத்துரைப்பதற்காக, தற்போது குமரி முதல் கோட்டை வரை நடை பயண பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அய்யாகண்ணு.
வார்த்தையை விட்ட நெல்லையம்மாள்
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நேற்று அவர் திருச்செந்தூர் சென்றுள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில், அவர் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தபோதுதான், நெல்லையம்மாள் அவரை கன்னத்தில் அறைந்துள்ளார். பெண்களிடம் துண்டு பிரசுரங்களை அய்யாகண்ணு வினியோகம் செய்தபோது நெல்லையம்மாள் அநாவசியமாக அதில் தலையிடுகிறார். யாரும் இவரிடம் வாங்காதீங்கம்மா.. அய்யாகண்ணு ஒரு 'ஃபிராடு' என்று சொல்கிறார் நெல்லையம்மாள்.
கெட்ட வார்த்தையில் பேசிய அய்யாகண்ணு
அப்போதுதான் அந்த துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்துவிடுகிறது. துண்டுபிரசுரம் கொடுப்பதை நெல்லையம்மாள் தடுத்ததை பார்த்த, அய்யாகண்ணு அந்த பெண்ணை பார்த்து, எழுத முடியாத அளவுக்கான ஒரு கெட்ட வார்த்தை பேசிவிடுகிறார். உடனே கோபத்தின் உச்சிக்கு சென்ற நெல்லையம்மாள், அய்யாகண்ணு கன்னத்தில் அறைந்துவிட்டார். இதையடுத்து அங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அய்யாகண்ணு ஆதரவாளர்கள், அந்த பெண்ணை அடிக்க பாய்ந்தனர். திட்டிதீர்த்தனர். அப்போது நெல்லையம்மாள் தரப்புக்கு ஆதரவாகவும் சிலர் பேசினர். அந்த தள்ளுமுள்ளுவின்போது தாக்கப்பட்டதாக நெல்லையம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
இரு தரப்பிலும் தவறுகள்
கோயில் வளாகத்தில் வழிபாட்டு நோக்கம் தவிர்த்து வேறு, பிரச்சாரங்களுக்கு இடம் கொடுப்பதில்லை. அதை மீறியது, அந்த பெண்ணை தரக்குறைவான வார்த்தையால் பேசியது ஆகியவை அய்யாகண்ணு மீதான குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்படுகின்றன. அய்யாகண்ணு பற்றி தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தியது, விவசாய போராளியும், வயதில் மூத்தவருமான அய்யாகண்ணுவை மரியாதையின்றி அறைந்தது ஆகியவை நெல்லையம்மாள் மீதான குற்றச்சாட்டுகள். துண்டு பிரசுரம் கொடுக்க வேண்டாம் என்று தடுத்து கண்ணியமாக நெல்லையம்மாள் நடந்திருந்தால் நிலைமை இந்த அளவக்கு போயிருக்காது. எனவே, இனிமேலாவது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத அளவுக்கு இருக்க வேண்டும் என்பதே இரு தரப்பினரின் கோரிக்கை.