மோடியை கண்டித்து திருச்சியில் நாளை எஸ்.டி.பி.ஐ கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
திருச்சி: திருச்சி பாஜக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாளை வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக நாளை கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சி பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது செய்தியாளர்களிடம் பேசுகையி்ல்,
தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பாரதீய ஜனதாகட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் மத்தியில் மத ரீதியாக பிளவுகளை ஏற்படுத்தும் வண்ணம், உண்மை செய்திகளை மறைத்து ஜூலை போராட்டம் என்ற பெயரில் விஷக்கருத்துக்களை விதைத்து வருகிறது.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்விச்சலுகைகளை பெறும் இச்சூழலில் இந்து மாணவர்களுக்கு கல்வியிலே சலுகை இல்லை என பொய்யாக பரப்புரை செய்கிறது.
மேலும் குஜராத் முதல்வர் மோடியின் வருகையினை மலிவான முறையில் விளம்பரம் செய்யும் நோக்கிலே பேனர் கிழிப்பு,போஸ்டர் கிழிப்பு போன்ற செயலகளை அவர்களே செய்து விட்டு பழியை முஸ்லீம் சமூகத்தின் மீது போடுகின்றனர். இது போன்ற இழிவான செயல்களை செய்வது பாஜகவுக்கு புதிதல்ல. எனவே தமிழக அரசும்,அனைத்து அரசியல் கட்சிகளும் பாஜகவின் இந்த இழிவான செயல்களையும்,பொய் பிரச்சாரங்களையும் கண்டிக்க வேண்டும்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வருகிற 26.09.2013 அன்று திருச்சி வருகின்ற போது, டிவிஎஸ் டோல்கேட் அருகே மதியம் 3.30 மணிக்கு மாநில பொதுசெயலாளர் நிஜாம் முஹைதீன் தலைமையில்,மாநில செயலாளர் அப்துல் சத்தார் முன்னிலையில் மோடியின் திருச்சி வருகையை கண்டித்து கருப்பு கொடி மற்றும் முற்றுகை போராட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக நடைபெறுகிறது
மனித உரிமை மீறலில் ஈடுபட்ட குஜராத் முதல்வர் மோடியை கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மதசார்பற்ற கட்சிகள், இயக்கங்கள் பல்வேறு சமூக அமைப்புகள், மதச் சார்பின்மையை விரும்பும் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.