தமிழக சுற்றுலாத் துறையின் புதிய ‘கடல் விமான’ சேவை.. சுற்றுலாப் பயணிகள் பறந்து கொண்டே ரசிக்கலாம்!
சென்னை: சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தமிழக சுற்றுலாத் துறை கடல் விமான சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.
உள்ளூர் மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர தமிழக சுற்றுலாத் துறைப் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அணை மற்றும் கடல் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய கடல் விமானங்களை அறிமுகப்படுத்த உள்ளது சுற்றுலாத் துறை.
இந்த கடல் விமானங்களானது நீரில் மிதந்து செல்லும். பின்னர் நீரில் இருந்தபடியே வானில் எழும்பும், பின்னர் மீண்டும் நீரிலேயே தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை குறிப்பிட்ட தூரங்களுக்கு இடையே பறந்து செல்லும்.
பறந்து பறந்து ரசிக்கலாம்...
இவற்றில் பயணிப்பதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் வானில் பறந்தபடியே அணைகள் மற்றும் கடலின் அழகைக் கண்டு களிக்கலாம்.
புதிய அனுபவம்...
சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அற்புதமான அனுபவத்தை அளிக்கும் வகையில் இவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக பல்வேறு நிறுவனங்களிடமிருந்தும் ஒப்பந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
அணைகளின் மேல்...
இந்த கடல் விமானங்கள் சில முக்கிய அணைகளின் மேல் பறந்து சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
6500 அடி உயரத்தில்...
இந்த கடல் விமானங்களில் ஆறு முதல் எட்டு சுற்றுலாப் பயணிகள் வரை பயணிக்கலாம். இவை சுமார் 6500 அடி உயரத்தில் பறந்து சுற்றுலாத் தளங்களின் மேற்புற அழகைக் காட்டும்.
வித்தியாசமான பயணம்...
நீரிலிருந்து புறப்பட்டு, மீண்டும் நீரிலேயே தரையிறங்கும் இந்த கடல் விமானங்கள் சுற்றுலாப் பயணிகள் வித்தியாசமான பயண அனுபவத்தைப் பெறுவர் என சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
திட்டவடிவு...
இந்தத் திட்டத்தை செயல்படுத்த பவன் ஹான்ஸ் என்ற முன்னணி நிறுவனம் முன்வந்துள்ளதாம். இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா கூறுகையில், "இது சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்தும் இடங்கள் குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சில அணைகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டு்ளன. அரசிடம் திட்ட வடிவு விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றார் மீனா.
ஆய்வுகள்...
பவன் ஹான்ஸ் நிறுவனம் இதற்காக ஜல் ஹான்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இது பரீட்சார்த்த ஆய்வுகளை முடித்து விட்டது.
வாட்டர் ஸ்போர்ட்ஸ்...
இதுதவிர தமிழகத்தைப் பொறுத்தவரை மாமல்லபுரம், மண்டபம், மணப்பாடு ஆகிய கடலோரப் பகுதிகளில் வாட்டர் ஸ்போர்ட்ஸை நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
விபத்துகளுக்குப் பேர் போனது...
ஏற்கனவே பல ஹெலிகாப்டர்கள் விபத்துகளை உண்டாக்கி சர்ச்சையில் சிக்கியது தான் இந்த பவன் ஹான்ஸ் நிறுவனம். குறிப்பாக வடமாநிலங்களில் பவன் ஹான்ஸின் ஹெலிகாப்டர் விபத்துகள் அதிகம். இந்த நிலையில், இது தமிழகத்தில் கடல் விமானங்களை இயக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.