திருப்பரங்குன்றம் மலை மீது ஏற தடை! காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா செல்ல அனுமதி இல்லை!
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபத்தூணில் விளக்கேற்றாததை கண்டித்து பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி அங்கு வன்முறையில் ஈடுபட்டதால் மலை மீது செல்ல 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்காவுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாததால் மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினருடன் (சிஐஎஸ்எஃப்) திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று மாலை உத்தரவிட்டார்.

இதையடுத்து மனுதாரர்களான ராமரவிக்குமார் , இந்து அமைப்பினர் 60-க்கும் மேற்பட்டோர் சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் நேற்று இரவு திருப்பரங்குன்றம் சென்றனர். முருகன் கோயிலுக்கு அருகில் உள்ள பழனியாண்டவர் கோயில் பாதை வழியாக மலை உச்சிக்குச் செல்ல முயன்றனர்.
அப்போது அவர்களை போலீஸார் தடுப்பு வேலிகளை போட்டு அவர்களுக்கு அனுமதி மறுத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படவில்லை என கூறி இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மேலும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி முழக்கமிட்டனர்.
அப்போது திடீரென தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு காவலர் காயம் அடைந்தார். இதையடுத்து தீபம் ஏற்ற பாஜகவினர் முன்னோக்கி சென்ற போது அவர்களை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர். அது போல் போலீஸார் தடுப்பை மீறி மலை பாதையில் ஓடிச் சென்றவர்களை பிடித்து வந்து வேனில் ஏற்றினர்.
இதனால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. சிஐஎஸ்எஃப் வீரர்களும் மலை மீது செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதே நிலையில் அவர்கள் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்காவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications