நாளை வருகிறார் மோடி.. பாதுகாப்பு வளையத்தில் திருச்சி- ஜமால் முகம்மது கல்லூரிக்கு விடுமுறை
திருச்சி: திருச்சியில் நாளை நடைபெறும் இளம் தாமரை என்ற பெயரிலான பாஜக மாநாட்டையொட்டி அங்கு வரலாறு காணாத பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரபல ஜமால் முகம்மது கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து கல்லூரியை மூடியுள்ளனராம்.
மேலும் மோடி வருகைக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், திருச்சியில் பாதுகாப்பும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இளம்தாமரை மாநாடு
நாளை திருச்சியில் பாஜக சார்பில் இளம் தாமரை மாநாடு நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
போலீஸ் கட்டுப்பாட்டில் மைதானம்
மாநாடு நடைபெறும் ஜவகர் மைதானத்தை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளனர். போலீஸ் அனுமதி பெற்ற பிறகே யாராக இருந்தாலும் உள்ளே நுழைய முடியும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
குஜராத் டிஐஜியின் ஆய்வு
நேற்று குஜராத்திலிருந்து வந்த டிஐஜி ஒருவர் மைதானத்தை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டார். மேலும் திருச்சி போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.
4500 போலீஸ் குவிப்பு
திருச்சியில் மோடி மாநாட்டுக்காக 5 டிஐஜிக்கள் தலைமையில் 4500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
15 குழுக்கள்
மேலும் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க 15 வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் குழுவினர், மோப்ப நாய்கள் சகிதம் பணியில் ஈடுபடுகின்றனர்.
முஸ்லீம் கல்லூரிக்கு விடுமுறை
இந்நிலையில் பாதுகாப்பு காரணம் கருதியும், முன்னெச்சரிக்கை காரணமாகவும் பிரபல ஜமால் முகம்மது கல்லூரிக்கு நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை விடச்சொல்லி காவல்துறை உத்தரவிட்டது. இதையடுத்து அக்கல்லூரிக்கு இரண்டு தினங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
சட்ட மாணவர்கள் எதிர்ப்பு
ஆனால் போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கையெழுத்து இயக்கமும் நடத்தினர். இதையடுத்து 5 மாணவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.