சீமான், ராமதாஸுக்கு மட்டும்தான் ஜாதியா... ஏன் எம்ஜிஆர், கருணாநிதிக்கெல்லாம் கிடையாதா- சீமான் கேள்வி
பரமக்குடி : சீமான், திருமாவளவன், ராமதாஸு ஆகியோர் வந்தால் ஜாதி என்னவென கேட்கிறீர்கள். ஏன் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவுக்கெல்லாம் ஜாதி கிடையாதா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில் திமுக நடத்துவதெல்லாம் கட்சியே கிடையாது. அது ஒரு கம்பெனி. மன்னர்கள் கூட இந்த அளவுக்கு வாரிசுகள் மூலம் நம்மை ஆண்டிருக்க மாட்டார்கள்.
ஆனால் இங்கே முதலில் கருணாநிதி வந்தார். அவர் இருக்கும்போதே ஸ்டாலினை நுழைத்தார். அது போல் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் வந்துவிட்டார். கருணாநிதி, அண்ணா, ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோர் சமாதிகளில் சத்தியம் செய்து விட்டு ஓட்டுக்கு காசு வாங்காமல் என்னை எதிர்த்து நில்லுங்கள் பார்ப்போம்.

பீதியடைந்த கட்சி
ஆர்கே நகர் மக்களுக்கு ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய்தான் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் ரூ. 10000 வரை எப்படி விலை ஏறியது. எல்லாம் எங்களால்தான். நாங்கள் அத்தொகுதியில் தேர்தலுக்காக ஆற்றிய களப்பணியை பார்த்துவிட்டு பீதியடைந்த கட்சியினர் விலையை உயர்த்தினர்.

குரல் கொடுக்கவில்லை
காசு கொடுப்பவர்களுக்கு 2 ஓட்டு, காசு கொடுக்காத எனக்கு ஒரு வோட்டாவது பாவம் பார்த்து போடுங்கள். நீங்கள் போடவில்லை என்றாலும் நான் உங்களை கஷ்டப்படுத்த மாட்டேன். ஸ்டெர்லைட்டுக்கு ஏன் சீமான் குரல் கொடுக்கவில்லை என்கிறார்கள்.
நான் என்ன டப்பிங் ஆர்டிஸ்டா. அங்கங்க வந்து குரல் கொடுப்பதற்கு.

மெழுகுவர்த்திகள்
இந்த திராவிட கட்சிகள் தமிழர்களின் வழிப்பாட்டு முறைகளிலிருந்து வெளியேற்றியே ஆட்சியை நடத்துகிறார்கள். அதற்கு பிற்பாடு ஜெயலலிதா, அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோரை கும்பிட வைத்துவிடுகிறார்கள். இனியாவது அவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள். இலை, குக்கர் என இரு கோஷ்டிகள் வந்துவிட்டன. எனவே குக்கர் மூலம் இலையை அவிப்பதற்கு பதில் இரு மெழுகுவர்த்திகளை பத்தவைத்து விட்டு போங்க.

கவுன்சிலர்
சீமான், திருமாவளவன், ராமதாஸ் இவங்களுக்கு மட்டும்தான் ஜாதியா. கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் எல்லாம் ஜாதி கேட்பதில்லையா. தமிழர்கள் வந்தால் ஜாதி கேட்கிறார்கள், மற்ற மாநிலத்தவர்கள் வந்தால் மட்டும் தலைவனாகவே ஏற்றுக் கொள்கிறார்கள். எம்ஜிஆரிடம் நீங்கள் ஜாதி என்ன என கேட்டிருந்தால் அவர் ஒரு வார்டு கவுன்சிலராக கூட ஆகியிருந்திருக்க மாட்டார் என்று சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications