தற்கொலை செய்தவனை கொலை செய்ய கிளம்பிய முதல் ஆள் வைகோ..
‘காங்கிரஸை வீழ்த்துவதற்காகவே பாரதிய ஜனதாவுடன் கூட்டணி' எனச் சொல்கிறீர்களே...! இனத்தை அழிக்கும் போர் ஈழத்தில் நடந்தபோது அதே காங்கிரஸ் கூட்டணியில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு மௌனம் காத்தீர்களே...! அது ஏன் அண்ணா?
காங்கிரஸ் கூட்டணியில் இருந்த கருணாநிதியும், அய்யா ராமதாசும் அன்றைக்கு ஈழத்துக் கொடுமையைக் கண்டித்து வெளியே வராததில் விசித்திரம் இல்லை. அவர்களுக்குப் பதவிக்குப் பிறகுதான் இனமும் ஈழமும். ஆனால், ஈழத்து இதயக்கூடாக உங்களை வடிவமைத்து வைத்திருக்கும் நீங்கள் அன்றைக்கு இதே காங்கிரஸ் கூட்டணியில் இருந்த உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்திருக்கலாமே...! இன்றைக்கு நடக்கிற தெலுங்கானா பிரிப்புக்கு எதிராகவும், ஆதரவாகவும் ஆந்திர மண்ணின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவியைத் துச்சமெனத் தூக்கிவீசி நாடாளுமன்றத்தையே திகைக்க வைத்தார்களே...!
மாநிலப் பிரிப்புக்கே அவர்கள் அப்படி கொந்தளிக்கையில் இனத்தின் எரிப்புக்கு நீங்கள் ஏதுமற்று நின்றது ஏன் அண்ணா? காங்கிரஸுக்குப் பாடம் புகட்ட நினைத்திருந்தால் அன்றைக்குத்தானே அண்ணா நீங்கள் போர்ப்பரணி பாடியிருக்க வேண்டும்.

பதவி இருந்தபோது மௌனம் சுமந்த நீங்கள் இன்றைக்கு ஏதுமற்றவராக நின்றுகொண்டு பாரதிய ஜனதாவுக்கு ஆள் பிடித்துக்கொண்டு அலைகிறீர்களே...! ‘காங்கிரஸை வீழ்த்தியே தீருவோம்' என வீறுகொண்டு கிளம்புகிறீர்களே...! தமிழகத்தில் காங்கிரஸின் நிலை என்னவென்று சிறுபிள்ளைக்குக்கூடத் தெரியுமே அண்ணா...!
செத்த பாம்பை அடிக்க ஊரைத் திரட்டி ஓடி வருகிறீர்களே...! இது உங்களுக்கே நகைப்பை உண்டாக்கவில்லையா?
கடந்த சட்டமன்றத் தேர்தலில் உங்களின் நிலைப்பாடு என்ன என்பது நினைவிருக்கிறதா? அ.தி.மு.க. கழுத்தை அறுத்த கணத்தில் உங்களின் மறைமுக ஆதரவு இதே காங்கிரஸுக்கும், தி.மு.க.வுக்கும் திரும்பியதை மறுக்க முடியுமா? ‘ம.தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் எங்கள் கூட்டணியை ஆதரித்துப் பணியாற்றுகிறார்கள்' எனத் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தபோது, அதை மறுத்து நீங்கள் அறிக்கை ஏதும் வெளியிட்டீர்களா என்ன? அன்றைய ம.தி.மு.க&வின் கொள்கைப் பரப்புச் செயலாளரும், இன்றைய அ.தி.மு.க&வின் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளருமான நாஞ்சில் சம்பத், ‘கனி எவ்வளவு கனிந்தால் என்ன... கை எப்பக்கம் எழுந்தால் என்ன... சூரியன் எத்திசை உதித்தால் என்ன... இலை கருகினால் போதும்' என முழங்கினாரே...! அதை ஏன் அண்ணா நீங்கள் கண்டிக்கவில்லை? காங்கிரஸைக் கருவறுக்க அன்றைக்கு நாங்கள்தானே அண்ணா களத்தில் நின்று போராடினோம். காங்கிரஸ் போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் தொண்டைத் தண்ணீர் வற்ற பரப்புரை செய்தோம்; தோற்கடித்தும் காட்டினோம்.
இன்றைக்கு காங்கிரஸை வீழ்த்தியே தீர இப்படி கூட்டணி போட்டுக் கிளம்புகிறீர்களே...! களத்தில் உங்களோடு சண்டையிட காங்கிரஸ் என்கிற ஒரு கட்சி இருக்கிறதா அண்ணா? பத்து வருட கோரத்தாண்டவ ஆட்சியின் வெறுப்பில் மொத்த தேசமுமே காங்கிரஸைத் துடைத்து தூர எறிகிற மனநிலையில் இருக்கும்போது, நீங்கள் ஏதோ முதல் ஆளாக அந்த வேலையைச் செய்யத் தொடங்கியதுபோல் தோற்றம் காட்டுவது முறையா அண்ணா?
தற்கொலை செய்துகொண்ட ஒருவனைக் கொலை செய்யக் கிளம்பிய முதல் ஆள் நீங்களாகத்தானே இருப்பீர்கள்.












Click it and Unblock the Notifications