கருநாக காங்கிரஸை கொல்ல பாஜக பாம்பா? புலிகளை பயங்கரவாதிகள் என்போருடன் கூட்டணியா?
காங்கிரஸ் என்கிற கருநாகத்தைக் கொல்ல பாரதிய ஜனதா என்கிற பாம்பை அல்லவா நீங்கள் பிடித்து வந்திருக்கிறீர்கள்? ஒருமித்துப் போராடி ஒரு தேசியக் கட்சியை விரட்டி அடித்திருக்கையில், இன்னொரு தேசிய கட்சிக்கு வால் பிடித்தபடி வந்து நிற்கிறீர்களே...! இது நியாயமா? ஈழ எதிர்ப்பு மனோபாவத்தில் காங்கிரஸுக்கு எந்தவிதத்திலாவது குறைந்த கட்சியா பாரதிய ஜனதா? நீங்கள் உயிர் மூச்சாக எண்ணும் தனித் தமிழீழக் கோரிக்கையில் சோவும், சுப்ரமணிய சுவாமியும், வெங்கையா நாயுடுவும், சுஷ்மா சுவராஜும் என்ன நிலைப்பாட்டை அண்ணா எடுத்திருக்கிறார்கள்? இனத்தின் விடிவுக்காக இன்னுயிர் துறந்து போராடிய புலிகளை தீவிரவாதிகளாவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கும் அத்தகைய தலைவர்களோடு எப்படி அண்ணா நீங்கள் நிலைத்திருக்கப் போகிறீர்கள்? இனவெறிக் கொடூரன் ராஜபக்சேயின் வருகையைக் கண்டித்து இங்கிருந்து பேருந்து பிடித்து பெரும் கூட்டத்தோடு சாஞ்சிக்குப் போய் நீங்கள் போராடினீர்களே..!

ராஜபக்சேயை அங்கே வர வைத்தது பாரதிய ஜனதாவின் சுஷ்மா சுவராஜ்தானே அண்ணா...! புத்த விகாரங்களைத் திறக்க உலகில் எத்தனையோ புத்த மதத் தலைவர்கள் இருக்க கொடுங்கோலன் ராஜபக்சேயை அழைக்க வேண்டிய அவசியம் சுஷ்மாவுக்கு ஏன் வந்தது?
சாஞ்சிக்குள் உங்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்ததும் இதே பாரதிய ஜனதா ஆட்சிதானே...! இனவெறியில் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவுக்கும், மதவெறியில் முஸ்லிம்களைக் கொன்ற மோடிக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்?
‘போரில் மடிந்தவர்களுக்குப் பொறுப்பேற்க முடியாது' என ராஜபக்சேவும், ‘கலவரத்தில் மடிந்தவர்களுக்குக் காரணம் நானா?' என மோடியும் கொடுக்கிற விளக்கம் உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா அண்ணா?
திருச்சி அரியலூர் ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாரே...! ரயிலை அவரா ஓட்டி வந்தார்?
கொலைகாரன் ராஜபக்சே அதிபராவதற்கும், மோடி பிரதமராவதற்கும் ஏதும் வித்தியாசம் இருக்கிறதா அண்ணா? ‘மோடி வெற்றி பெற்றால் ஈழம் கிடைக்கும்' என்கிறீர்களே...! என்றைக்காவது ஈழம் குறித்து மோடி முழங்கி இருக்கிறாரா அண்ணா?
‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என அம்மையார் ஜெயலலிதா சொன்னதை நான் பரப்புரையில் சொன்னேன். அதற்கே ஏக விமர்சனங்களை எதிர்கொண்டேன். ஆனால், மோடி சொல்லாத ஒன்றையே பரப்புரையாகச் சொல்லி வாக்கு சேகரிக்கிற உங்களை எப்படி அண்ணா ஈழமும், தமிழகமும் ஏற்கும்?












Click it and Unblock the Notifications