திருமணத்துக்கு முன்பு மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை: விழிப்புணர்வு ஏற்படுத்த ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: திருமணத்துக்கு முன்பு மண மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் கவுன்சலிங் நடத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திருமணத்திற்கு முன்பு ஆண் மற்றும் பெண் மருத்துவ ஆலோசனை பெற்று திருமணம் செய்து கொண்டால் விவாகரத்து செய்வது குறையும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீதிபதி என் கிருபாகரன் விவாகரத்து வழக்கு ஒன்றிற்கு தீர்ப்பளிக்கும் போது இதனை தெரிவித்தார். திருமணத்திற்கு பிறகு மருத்துவ பிரச்னைகளால் பல மனஸ்தாபங்கள் ஆண், பெண்ணிற்கு இடையே ஏற்படுகின்றன. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் திருமணத்திற்கு முந்தைய மருத்துவ ஆலோசனை வழங்குவதை உறுதி செய்ய முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார்.
நோயை மறைத்த கணவன்
இதயநோய், புற்றுநோய் இருப்பதை மறைத்து தம்மை திருமண செய்து கொண்ட கணவனிடமிருந்து விவாகரத்து வழங்கக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஓர் இளம்பெண் வழக்கு தொடர்ந்தார். அதே நேரத்தில் தன்னுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு உத்தரவிடக்கோரி அவளது கணவர் வேறொரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஹைகோர்ட் நீதிபதி
இந்நிலையில் இந்த இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்கக் கோரி அந்தப் பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இருவரும் நன்கு படித்தவர்கள். திருமணம் முடித்து சில மாதங்களிலே விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
மணப்பெண்ஏமாற்றம்
திருமணம் முடிந்து தேனிலவுக்குப் போனபோதுதான் கணவர் நோய் வாய்ப்பட்டவர் என அந்தப் பெண்ணுக்கு தெரியவருகிறது. ஏராளமான கனவுகளுடன் திருமண பந்தத்துக்குள் நுழைந்த அப் பெண்ணுக்கு ஏமாற்றம் ஏற்பட் டிருக்கிறது. பிறகு மருத்துவப் பரிசோதனை செய்தபோதுதான் அவளது கணவனுக்கு இதயத்தில் ஓட்டையும், காலில் தொடைப் பகுதியில் புற்றுநோயும் இருப்பது தெரியவந்துள்ளது.
விவாகரத்து
இனிமேலும் அவரால் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது என்று உறுதியாக தெரிந்த பிறகு வேறுவழியில் லாமல் விவாகரத்து முடிவுக்கு வந்த அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இதய நோய் மற்றும் புற்றுநோய் இருப்பதை மறைத்து திருமணம் செய்து கொண்டதால் அந்த திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரியுள்ளார்.
மன உளைச்சல்
அவளது கணவருக்கு புற்றுநோய் இருப்பது மருத்துவப் பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவருகிறது. இந்நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் அந்தப் பெண்ணுக்கு அநீதி இழைக்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு அவரது மனு ஏற்கப்பட்டு, அந்த திருமணம் செல்லாது என அறிவிக்கப்படுகிறது. அவளது கணவர் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
மருத்துவ பரிசோதனை
திருமணத்துக்கு முன்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் கவுன்சிலிங் நடத்த வேண்டியதன் முக்கியத் துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழிப்புணர்வு அவசியம்
குறைந்த வயதில் திருமணம் செய்து கொள்பவர்கள் அதிகமாக மருத்துவ காரணங்களால் மணமுறிவு ஏற்படுத்திக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். ஊடகங்களில் விளம்பரம், குறும்படம், கல்லூரிகளில் கருத்தரங்கம் உள்ளிட்டவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தனது உத்தரவில் நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.