வேலூர்: செந்தூரன் ஜாமீனில் விடுதலை!.... செங்கல்பட்டு முகாமிற்கு சென்றார்
வேலூர்: ஈழத்தமிழர் செந்தூரனுக்கு வேலூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து செங்கல்பட்டு முகாமில் உள்ள தனது குடும்பத்தினரை பார்க்க சென்றார்.
கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட ஈழத்தமிழர் செந்தூரன், தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தார்.

தொடர்ந்து 22 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த செந்தூரனுக்கு கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி உடல்நிலை மிகவும் மோசமானது.
இதனால், செந்தூரனை சிறைத்துறை அதிகாரிகள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பார்க்க வந்த அவரது மனைவி மங்கையர்க்கரசியை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.
அதையடுத்து மங்கையர்கரசி தனது கணவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி கணவனை மங்கையர்க்கரசி சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து உண்ணாவிரதத்தை செந்தூரன் முடித்துக் கொண்டார்.
இந்த நிலையில் செந்தூரன் வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், "என் குடும்பம் செங்கல்பட்டில் உள்ளது. அதனால் நான் அங்குள்ள அகதிகள் முகாமிற்கு செல்ல ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், செந்தூரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதை தொடர்ந்து அவர் செங்கல்பட்டில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமுக்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் செந்தூரன் அழைத்து செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications