வகையாக மாட்டும் சசிகலா குடும்பம்.. ஆவணங்கள் சிக்கியது.. போலி நிறுவனங்கள் அம்பலம்!
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் வீடு மற்றும் நிறுவனங்களில் நடத்திய சோதனையில் பல நூறு கோடி சொத்து ஆவணங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
சென்னை: சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. பெருமலவிலான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக் வீடுகளிலிருந்து ஏராளாமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலி நிறுவனங்கள் நடத்தியதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளன. பிற இடங்களிலிருந்தும் ஆவணங்களும், ரொக்கம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சோதனை முடியவில்லை.
ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடந்துகொண்டுவருகிறது. பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் எங்களது ஆய்வில் உள்ளது. சோதனை முழுவதும் முடிந்தால்தான், வரி ஏய்ப்பு, பறிமுதல் குறித்து சொல்லமுடியும் என்றார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள்.
அதிகாரிகளையே மிரட்டிய கும்பல்
கிருஷ்ணபிரியா வீடு, விவேக் வீடு, மன்னார்குடியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்திய அதிகாரிகளை சிலர் மிரட்டியுள்ளனர். சோதனையின் போது வெளியே வந்த அதிகாரிகளை அங்கிருந்தவர்கள் முற்றையிட்டு மிரட்டியுள்ளனர். அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். இது சரியான போக்கு அல்ல என்று சொல்லும் வருமானவரித்துறை அதிகாரிகள், தவறு செய்யவில்லை என்றால் ஏன் அதிகாரிகளை அச்சுறுத்தவேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர்.
ஆதாரம் இல்லாததால் தாமதம்
அதேபோல், அரசியல் ரீதியான சோதனை என்பதையும் அதிகாரிகள் மறுக்கிறார்கள். பல வருடங்களாகவே சசிகலா குடும்பத்தினருக்கு வலை பின்னப்பட்டதாகவும், ஆனால், உரிய ஆவணங்கள் கிடைக்காததால் தாமதம் ஆனதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். சசிகலா குடும்பத்தின் வரவு செலவு குறித்து ஆராய்ந்தபோது மணல் ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி சிக்கியதாகவும், அவர் குறித்து முழுமையாக விசாராணை முடிந்துள்ள தருவாயில் தற்போது சசிகலா குடும்பத்தினர் மீது விசாரணை தொடங்கி நடந்துவருகிறது.
எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள் பறிமுதல்
பல இடங்களிலிருந்து மொபைல் போன்கள், லேப்டாப்கள், ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. போலியான வங்கி கணக்குகளில் பணம் செலுத்தியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கி அதிகாரிகளும் விசாரணை வளைத்துக்குள் கொண்டுவரப்படுவார்கள். சசிகலாகுடும்பத்தினர் வங்கி கணக்குகளை முடக்குவது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்.
வரி ஏய்ப்பு எவ்வளவு?
சோதனை முடிந்ததும், விவேக், கிருஷ்ணபிரியா உள்ளிட்டோருக்கு சம்மன் வழங்கப்பட்டு விசாரணை ஆஜராகவேண்டும். குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள சொத்து, ரொக்கம், தங்கம் ஆகியவற்றிக்கு உரிய ஆவணங்களை சமர்பிக்க காலக்கெடு விதிக்கப்படும். இதையடுத்து இறுதியாக வரி ஏய்ப்பு எவ்வளவு என்பதை இறுதி செய்யப்படும் என்றார் மூத்த வருமானவரித்துறை அதிகாரி.