தொடர்ந்து கழிவு நீர் கலப்பு... சாக்கடையான காவிரி நீர்!
மேட்டூர்: பல எச்சரிக்கைகளுக்குப் பிறகும் கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் சாக்கடை காவிரியில் கலப்பதால் மேட்டூர் அணையில் உள்ள நீர் பச்சை நிறமாகக் காணப்படுகிறது.
கர்நாடக மாநில அணைகளில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீரில் கழிவுநீரும் கலந்து வந்தது. பெங்களூர் மற்றும் காவிரியை ஒட்டியுள்ள கர்நாடகப் பகுதிகளிலிருந்து தொடர்ந்து சாக்கடை நீர் காவிரியில் கலந்ததால், காவிரி சாக்கடை மயமானது. கடந்த செப்டம்பர் மாதம் கடைசி மாதம் முதல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.
இதனால் அணையின் இடதுகரை பகுதியில் பழைய தண்ணீர் அப்படியே தேங்கி நிற்கிறது. கர்நாடக மாநில கழிவுநீர் கலந்த அந்த தண்ணீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது.
கழிவுநீர் கலந்த அந்த தண்ணீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும், அந்த தண்ணீரை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி அறிந்த மேட்டூர் சட்டமன்ற தொகுதி தே.மு. தி.க. உறுப்பினர் பார்த்திபன் நேற்று முன்தினம் மேட்டூர் அணையில் துர்நாற்றம் வீசும் 16 கண் பாலம் பகுதிக்கு சென்று தண்ணீரை நேரில் பார்வையிட்டார்.
இதற்கிடையே, இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக மேட்டூர் அணைக்கு வந்து பச்சை நிறத்தில் உள்ள தண்ணீரை பார்வையிட்டனர். பின்னர் அந்த தண்ணீரை பரிசோதனை செய்வதற்காக எடுத்துச்சென்றுள்ளனர்.