சீர்காழி கொடூர கொலை.. வட மாநில கொள்ளையர்களை ரவுண்டு கட்டிய போலீஸ்.. தப்பியோடியவன் மீது என்கவுண்டர்
சீர்காழி: தமிழகத்தை உலுக்கும் வகையில் ஒரு பெரிய கொள்ளை சம்பவம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் இன்று நடந்தது.
Recommended Video
சீர்காழி நகரில் நகை வியாபாரி வீடு புகுந்து வடமாநில கொள்ளையர்கள் அவரது மனைவி மற்றும் மகளை கொலை செய்து விட்டு, 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். நகை வியாபாரி மற்றும் மருமகள், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கில் தொடர்புள்ள கொள்ளையனை போலீசார் என்கவுண்டர் செய்து கொன்றுள்ளனர்.

வட மாநில கும்பல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியில் வசிப்பவர் தன்ராஜ் (50). இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இவரது மனைவி பெயர் ஆஷா (45). மகன் பெயர் அகில் (24), மருமகள் பெயர் நிக்கில். இவர்கள் நான்கு பேரும் தான் இந்த வீட்டில் வசித்து வந்தனர்.
இன்று காலை 6:30 மணி இருக்கும். 4 பேர் அங்கு போயுள்ளனர். கதவை தட்டி ஹிந்தியில் ஏதோ பேசியுள்ளனர். நகை தொடர்பாக யாரோ வந்திருப்பதாக நினைத்து, தன்ராஜ் குடும்பத்தினர் கதவை திறந்துள்ளனர்.

கழுத்தை அறுத்து கொலை
அவ்வளவுதான்.. உள்ளே வேகமாக புகுந்து கதவை பூட்டிய கொள்ளையர்கள், தன்ராஜ் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகிய இருவரையும் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர். தன்ராஜ் மற்றும் மருமகள் நிக்கில் இருவரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளனர். இதன்பிறகு, வீட்டின் படுக்கையறை கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த 16 கிலோ தங்க நகைகளை சுருட்டியுள்ளனர். மேலும், வீட்டில் இருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கையும் கணக்குப் போட்டு எடுத்துள்ளனர். பிறகு, தன்ராஜின் காரையும் திருடிக் கொண்டு நகைகளை அதில் வைத்துக் கொண்டு நான்கு பேரும் தப்பி சென்றுள்ளனர்.

ஹிந்தியில் பேசினர்
தனராஜ் மற்றும் மருமகள் நிக்கல் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். தன்ராஜ் அடகு நகை வியாபாரம் மற்றும் மொத்த நகை வியாபாரம் செய்து வந்தவர். முதற்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் ஹிந்தியில் பேசியதாக கூறப்படுகிறது. அவர்கள் வட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.

சிசிடிவி காட்சிகள்
அந்த ஏரியாவில் காவல்துறையினர் பொருத்திய கண்காணிப்பு கேமரா மற்றும் பிற வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறது காவல்துறை. தன்ராஜ் கார் எந்த வழியாக சென்று உள்ளது என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு வடமாநில கொள்ளையர்கள் ஓசூர் நகரில் தனியார் நிதி நிறுவனம் உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்தனர். ஆனால் கொள்ளை நடந்த 18 மணி நேரத்தில் போலீசார் கொள்ளையர்களை கைது செய்தனர். இது பாராட்டுக்களை பெற்றது.

வட மாநில கொள்ளையர்கள் அட்டகாசம்
அடுத்தடுத்து வடமாநில கொள்ளையர்கள் தமிழகத்தில்.. அதுவும் நகர்ப்புற பகுதிகளுக்குள் புகுந்து, பகல் நேரத்தில் கொள்ளை அடிக்கும் அளவுக்கு நிலைமை போய்விட்டதா என்று மக்களிடையே பீதி ஏற்பட்டது. காவல்துறையினர், வடமாநில கொள்ளையர்களின் அட்டகாசத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், சீர்காழியில் ஹிந்தி பேசியபடி சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது ஒருவர் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். எனவே போலீசார் என்கவுண்டர் நடத்தி அவரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications