'டியர்' என்று சொல்வது அவ்வளவு மோசமானதா ஸ்மிருதி இரானி அவர்களே? அப்போ இத பாருங்க..
சென்னை: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும், பீகார் மாநில கல்வித்துறை அமைச்சர் அசோக் சவுத்ரிக்கும் நடுவே நடைபெற்ற சோஷியல் மீடியா சண்டை பற்றி உங்களுக்கு தெரியும்.
"டியர் ஸ்மிருதி இரானி அரசியலிலும் மேடைப் பேச்சுகளிலும் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, புதிய கல்விக் கொள்கையில் (என்இபி) நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். புதியக் கல்விக் கொள்கையை எப்போது கொண்டு வருவீர்கள்? உங்கள் நாள்காட்டியில் 2015ம் ஆண்டு இன்னும் முடிவுறவில்லையா?" எனப் பதிவிட்டிருந்தார்.
புதிய கல்வி கொள்கையை 2015ல் கொண்டுவருவதாக இரானி கூறியிருந்தது குறித்த நினைவூட்டல்தான் அந்த டிவிட்.
கொதித்த இரானி
ஆனால், பீகார் அமைச்சர் எதிர்பார்க்காத ஒன்று அங்கு நடந்துவிட்டது. பதில் பதிவிட்ட ஸ்மிருதி இரானி, "எப்போதிருந்து பெண்களை நீங்கள் டியர் என அழைக்க ஆரம்பித்தீர்கள் அசோக்" என கேள்வியெழுப்பினார்.
தப்பில்லை
அதற்கு பதிலளித்த அசோக் சவுத்ரி, "தொழில்முறை மின்னஞ்சல்கள் டியர் என்றே ஆரம்பிக்கின்றன. உண்மையான பிரச்சினைக்கு பதிலளியுங்கள், அதனை சுற்றிச் சுற்றி வராதீர்கள்" என பதிவிட்டார்.
டியர் நல்லதா
இந்த பிரச்சினை காரணமாக, இப்போது உயரதிகாரிக்கு அதுவும் பெண் அதிகாரி என்றால் டியர் என்று முன்னுரையுடன் மெயில் அனுப்ப ஊழியர்கள் அச்சப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். டியர் என்பது ஆபாசமான வார்த்தை என்ற எண்ணம் விதைக்கப்பட்டுள்ளது.
சந்தேகங்கள்
உண்மையில் டியர் அப்படிப்பட்ட வார்த்தைதானா.. இந்த வார்த்தை அலுவல் ரீதியாக பயன்படுத்தபடுவது இல்லையா.. புரோட்டோக்கால் படி அமைச்சரை இவ்வாறு கூப்பிட கூடாதா.. இந்த கேள்விக்கு மூத்த பத்திரிகையாளர் கதிர் சொல்லும் பதிலோ, டியர் என்பது நல்ல வார்த்தை என்பதுதான்.
ஜனாதிபதியை கூட அழைக்கலாம்
பத்திரிகையாளர் கதிர் கூறியுள்ளதாவது: மரியாதைக்குறிய (Honorable) என்று அழைப்பதெல்லாம், சபைக்குள் மட்டுமே நடைமுறையிலுள்ள வார்த்தை. ஆனால், டியர் என்பது, ஒருவரை அழைத்தல், விளித்தல். Protocolல் இது வராது. ஜனாதிபதியைக்கூட டியர் சர்னு அழைக்கலாம்.
சும்மா கூப்பிட கூடாது
Honorable என்ற வார்த்தை பழையது. நீதிமன்றத்தில் கூட அந்த வார்த்தை பயன்பாடு இல்லை. பெயரையோ, அல்லது பதவியையோ குறிப்பிடாமல் வெறுமனே டியர் என்று அழைத்தால்தான் அது தவறு. இவ்வாறு கதிர் தெரிவித்தார்.
டியர் சர்ச்சை
இதனிடையே இரானியின் திடீர் கோபத்தை சோஷியல் மீடியாவாசிகள் கிண்டல் செய்கிறார்கள். சக அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஒருமுறை, இரானிக்கு டியர் என விளித்து கடிதம் எழுதியிருந்ததை சுட்டிக்காட்டுகிறார்கள்.
கேள்விக்கு பதில் இல்லை
பிரதமர் நரேந்திர மோடிகூட தனது டிவிட்டரில் டியர் என்ற வார்த்தையை பிரயோகத்தை பயன்படுத்தி நடிகைகளுக்கு மென்ஷன் செய்ததை சில நெட்டிசன்கள் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து போட்டுள்ளனர். எது எப்படியோ, கல்விக் கொள்கை எங்கே என்ற கேள்விக்கு மட்டும் பதில் வரவில்லை. திசை திருப்பி விட்டாச்சு என்ற நிம்மதி இரானிக்கு.