தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி - வாட்ஸப்பில் உரையாடல் ரிலீஸ்... சஸ்பெண்ட்!
பெரம்பலூர்: பெரம்பலூரில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி ஒருவரின் உரையாடல் வாட்ஸப்பில் வெளியாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் பல்வேறு திட்ட பயன்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக அரசின் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பாலையூர் கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பவரின் தாய் ஜெயக்கொடி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.
மகளுக்கு கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளதாகவும், அவருக்கு தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டத்தில் உதவி தொகை வழங்க வேண்டும் என்று அந்த விண்ணப்பத்தில் கேட்டிருந்தார்.
இது தொடர்பாக வேப்பந்தட்டை பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் சமூக நல விரிவாக்க அலுவலராக பணியாற்றும் பூங்கா வனம் என்பவரை ஜெயக்கொடி அணுகினார். அப்போது தாலிக்கு தங்கம் திட்டத்தில் உதவி தொகை கிடைக்க ரூபாய் 1000 லஞ்சம் தந்தால் பணம் மற்றும் தங்கம் பெறுவதற்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார். இந்த நிலையில் பணம் கொடுப்பது தொடர்பாக ஜெயக்கொடி சமூக நலத்துறை அலுவலரை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவர்களது பேச்சு வாட்ஸ் அப்பில் வெளியாகி உள்ளது.
அந்த பரபரப்பான உரையாடல்:
பயனாளி: பரமேஸ்வரியோட அம்மா பேசுறேன்... இப்ப யூனியனுக்கு வந்தா இருப்பீங்களா?
அதிகாரி: இங்க தான் யூனியன்லதான் இருக்கேன்.
பயனாளி: சரி தம்பிய வரச்சொல்றேன். குடுத்தனுப்புறேன்.
அதிகாரி : குடுத்தனுப்புங்க பட்டுன்னு, இப்ப நான் கிளம்பிடுவேன், எத்தினி மணிக்கு வராங்க.
பயனாளி: இப்ப உடனே வருவாங்க.
அதிகாரி : வந்தா உள்ளாற வர சொல்லு, அங்க வெளியில நின்னு ஃபோன் பண்ண சொல்லு வந்துடுறேன்.
பயனாளி : இல்ல... உங்கள என்னான்னு சொல்லி கேக்கணும்.
அதிகாரி: ஒன்னு வேணாம். எம்.எஸ் ன்னு சொல்லி கேட்கச்சொல்லும்மா.
பயனாளி: சரிங்க, எவ்வளவு அமவுண்ட் சொன்னீங்க
அதிகாரி : ஆயிரம் ரூபாய் சொன்னேன் (குரல் சத்தம் குறைவாக இருந்தது)
அதிகாரி : குடுத்தனுப்பங்க, பட்டுன்னு நான் போய் பார்த்து, இத பண்ணுறேன், போய் போன் பண்ணுறேன்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அகமது விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடத்தியதில் சமூக நலத்துறை அலுவலர் பூங்காவனம் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ரூபாய் 1000 லஞ்சம் கேட்டது உறுதியானது. இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தார்.