சோனியா காந்தி, நரேந்திர மோடி இன்று தமிழகத்தில் பிரசாரம்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
சென்னை: லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று வருகை தருகின்றனர். இதைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் மோடி மட்டும் 3 முறை பிரசாரம் செய்துள்ளார். ஆனால் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் யாரும் தமிழகத்துக்கு வராமல் இருந்தனர்.
சோனியா காந்தி..
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார்.
இதற்காக கன்னியாகுமரி முருகன்குன்றம் அருகே 18 ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை தயாராக உள்ளது. .இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சோனியாகாந்தி இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் காலை 10.30 மணிக்கு கன்னியாகுமரி விருந்தினர் மாளிகை ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார்.
பின்னர் கார் மூலம் பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்து சிறப்புரையாற்றுகிறார். அப்போது கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் உள்பட 39 வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
நரேந்திர மோடி..
இதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்தில் இன்றும்ம் நாளையும் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். இன்று மாலை கிருஷ்ணகிரியில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார்.
இதற்காக விமானம் மூலம் இன்று மாலை 3 மணிக்கு ஓசூருக்கு வரும் நரேந்திர மோடி, பேளகொண்டப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விமான ஓடுதளத்தில் இறங்கி, அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகிரிக்கு கிளம்புகிறார்.
கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கும் மோடி, அங்கிருந்து கார் மூலம் மாலை 3.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் கந்திக்குப்பம் மைதானத்திற்கு வருகிறார். அங்கு பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பங்கேற்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் அரக்கோணம் தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து ஆதரித்து பேசுகிறார்.
சேலத்தில் மோடியுடன் விஜயகந்த்
பின்னர் கிருஷ்ணகிரியில் இருந்து மாலை 5 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் நரேந்திர மோடி, 5.15 மணிக்கு சேலம் இரும்பாலையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார். அங்குள்ள வித்யாமந்திர் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் இருந்தபடி பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
சேலத்தில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் எல்.கே.சுதீஷ், கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் டாக்டர் ஈஸ்வரன் உள்பட 14 வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசுகிறார். இந்த பிரசார கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார்.
கோவையில்..
சேலத்தில் பிரசாரத்தை முடித்ததும் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கோவை புறப்பட்டு செல்கிறார்.அவர் கோவை கொடிசியாவில் இரவு 7 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த பொதுக்கூட்டம் முடிவடைந்த பிறகு இரவில் கோவை அவினாசி ரோட்டில் உள்ள லீமெரிடியன் ஓட்டலில் தங்குகிறார்.
அதன் பின்னர் நாளை காலை 9 மணிக்கு விமானம் மூலம் மதுரை புறப்பட்டு செல்கிறார். நரேந்திர மோடி கோவையில் பிரசாரம் செய்வதையொட்டி கோவையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.