நாகர்கோவில் மாநகராட்சி ஆனால்.. தென் தமிழகத்தின் கை ஓங்கும்.. எப்படி தெரியுமா?
சென்னை: தமிழகத்தின் 13வது மாநகராட்சியாக மலரவுள்ளது நாகர்கோவில்.
தென் கொடி நகரான நாகர்கோவில், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகராகும். தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க நகரங்களில் ஒன்றான நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட தலைநகராக திகழ்கிறது.
தமிழகத்தில் ஏற்கனவே 12 மாநகராட்சிகள் உள்ளன. தற்போது நாகர்கோவில் 13வது மாநகரமாக இந்த வரிசையில் இணையவுள்ளது. தமிழகத்தில் தற்போது உள்ள மாநகராட்சிகளின் விவரம்:
12 மாநகரங்கள்
சென்னை (மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஆண்டு 1688), மதுரை (1971), கோவை (1981), திருச்சி (1994), சேலம் (1994), நெல்லை (1994), வேலூர் (2008),
தூத்துக்குடி (2008), திருப்பூர் (2010), ஈரோடு (2010), தஞ்சாவூர் (2013), திண்டுக்கல் (2014).
2 வடக்கு
வட தமிழகத்தைப் பொறுத்தவரை 2 நகரங்களே மாநகராட்சிகளாக உள்ளன. அவை சென்னை மற்றும் வேலூர் ஆகியவை. இதில் சென்னை சூப்பர் சீனியர் என்றால் வேலூர் 2008 முதல்தான் மாநகராட்சியாக உளளது.
தெற்கில் 4
தென் தமிழகத்தைப் பொறுத்தவரை நான்கு மாநகராட்சிகள் உள்ளன. மதுரை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் திண்டுக்கல் ஆகியவை அவை. இதில் சீனியர் மதுரை. ஜூனியர் திண்டுக்கல். 2014ம் ஆண்டு முதல் திண்டுக்கல் மாநகராட்சியாக உள்ளது.
மேற்கிலும் 4
கொங்கு மண்டலம் என அழைக்கப்படும் மேற்கு தமிழகத்திலும் நான்கு மாநகராட்சிகள் உள்ளன. கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகியவை அது. இதில் 1981ல் கோவை மாநகராட்சியானது. கடைசியாக 2010ம் ஆண்டு ஈரோடு மாநகராட்சியாக்கப்பட்டது.
மத்திய தமிழகத்தில் 2
மத்திய தமிழகத்தைப் பொறுத்தவரை திருச்சி, தஞ்சாவூர் ஆகியவை மட்டுமே மாநகராட்சியாக உள்ளன. இதில் திருச்சி 1994 முதலும், தஞ்சாவூர் 2013ம் ஆண்டு முதலும் மாநகராட்சிகளாக உள்ளன.
தென் தமிழகத்தின் கை ஓங்கும்
நாகர்கோவில் மாநகராட்சியாக மாற்றப்பட்டால் தென் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 5 ஆக உயரும். இதன் மூலம் அதிக மாநகராட்சிகளை கொண்ட பகுதியாக தென் தமிழகம் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் என்னதான் இத்தனை மாநகராட்சிகள் இருந்தாலும் கூட இவற்றின் மொத்த வளர்ச்சியைக் கூட்டிப் பார்த்தாலும் கூட பெரிய அளவில் எந்த அடிப்படை கட்டமைப்பும் இல்லை என்பதே நிதர்சனம்.