தமிழக மீனவர்கள் 7 பேர் கைது..இலங்கை கடற்படை அட்டூழியம்..எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புகார்
ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு கைது செய்யப்பட்ட மீனவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி 87 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கோட்டைப்பட்டினத்தில் இருந்து 32 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்தனர்.
தமிழக மீனவர்கள் இன்னும் எத்தனை நாள் துயரம் அனுபவிக்க வேண்டும்? மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் காட்டம்
இலங்கை கடற்படை
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களது மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் காங்கேசன் துறை கடற்படை தளத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
மீனவர்களின் குடும்பங்கள்
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினரும் மீனவர்களும் மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.
முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் 20.09.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும், அவர்களின் விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். இதுதவிர ஏற்கெனவே 95 மீன்பிடி படகுகளும், 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
விடுவிக்க வேண்டும்
கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகள் வாயிலாக தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
7 தமிழக மீனவர்கள் கைது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள், நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அந்த பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி சிறை பிடித்துள்ளனர். விசாரணைக்காக காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
தீபாவளி விடுமுறை
கடந்த சில நாட்களாக கடலில் மீன் வளம் குறைந்து காணப்பட்டு கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு குறைவான மீன்கள் மட்டுமே கிடைத்து வந்தது. இதனால் தினந்தோறும் மீனவர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக இரண்டு தினங்கள் கடலுக்குச் செல்லாமல் படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
நெடுந்தீவு அருகே கைது
இந்த நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடி அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியான கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்குமிடையே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதில் நாலாபுறமும் சிதறி ஓடிய படகுகளில் ஒரு படகை சிறை பிடித்து அதிலிருந்து ஏழு மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக இலங்கை காங்கேசன் துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மீனவர்கள் அச்சம்
தீபாவளி விடுமுறைக்கு பின்னர் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு இந்த கைது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களையும் அவர்களது படகையும் உடனே விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாரம்பரிய மீன் பிடிப்பு பகுதியில் தமிழக மீனவர்கள் அச்சம் இன்றி தொடர்ந்து மீன் பிடிக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெற்றுத் தர வேண்டும் எனவும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.