For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜபக்சேவை கூண்டில் ஏற்ற பிப்ரவரி 26ல் "நீதி கேட்கும் குரல் முழக்கம்" போராட்டம்: வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றக் கூண்டில் ஏற்ற வலியுறுத்தி பிப்ரவரி 26ல் "நீதி கேட்கும் குரல் முழக்கம்" ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

Vaiko

இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

'ஈழத் தமிழ் இனத்தை பூண்டோடு கருவறுக்கத் திட்டமிட்டுக் கோரமான இனப்படுகொலை நடத்திய சிங்களப் பேரினவாத கொடியோன் ராஜபக்சே அரசையும், அவன் கூட்டத்தையும் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் ஏற்றுக! தண்டனை தருக! அதற்கு சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணையை அனைத்துலகம் நடத்துக! சுதந்திரத் தமிழ் ஈழம் மலர தமிழ் ஈழத்திலும், தரணிவாழ் ஈழத் தமிழர்கள் மத்தியிலும் பொதுவாக்கெடுப்பு நடத்துக! என மனித குலத்தின் மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டுகிற நாள்தான் பிப்ரவரி 26 ஆகும்.

வீரத் தியாகி முத்துக்குமார் தீக்குளித்த ஐந்தாவது நினைவு நாளான ஜனவரி 29ல் நெதர்லாந்து நாட்டிலிருந்து புறப்பட்டு, பனி படர்ந்த நிலங்கள் வழியே விடுதலைப் புலிகளின் பதாகை ஏந்தி வீர முழக்கமிட்டு, ஈழத்து இளம் தமிழர்கள் ஜெனீவா நோக்கி நடக்கின்றனர்.

தியாக தீபம் முருகதாசன் தீக்குளித்து மடிந்த மார்ச் 10 ஆம் நாளில் அத்தியாகத் திருமேனியை தீயின் நாக்குகள் தழுவிய ஜெனீவாவின் மனித உரிமைகள் ஆணைய கட்டிடத்துக்கு எதிரே உள்ள முருகதாசன் திடலில் திரளும் இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களோடு அவர்கள் சங்கமித்து நீதி கேட்டு எழுப்பும் முழக்கம் விண்முட்ட எழும். அதற்குக் கட்டியம் கூறும் வகையில் பிப்ரவரி 26 இல் தாய்த் தமிழகத்திலும், உலகெங்கிலும் நீதிக்கான போர் முழக்கத்தை எழுப்புவோம்.

தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையிலும், மாவட்ட தலைநகரங்களிலும், பிற இடங்களிலும் பிப்ரவரி 26 புதன் கிழமை காலை 11 மணிக்கு சாதி, மதம், கட்சி எல்லைகள் கடந்து நீதி கேட்கும் பட்டயங்கள் ஏந்தி ஆர்ப்பரித்து முழக்கமிட அழைக்கிறேன்.

ஈழத் தமிழ் உணர்வாளர்களே, மாணவச் செல்வங்களே, நீதியின்பால் பசிதாகம் உள்ளவர்களே! நம் தொப்புகள் கொடி உறவுகளான பிஞ்சு மழலைகள், அன்னையர் தந்தையர், சகோதர சகோதரிகள் இலட்சக் கணக்கில் வதையுண்டு மடிந்தனரே! அவர்கள் கொட்டிய குருதித் துளிகளையும், எழுப்பிய மரண ஓலத்தையும் நெஞ்சில் நினைத்துத் திரளுங்கள். கட்சிக் கொடிகளைத் தவிர்த்து அலை அலையாய் அணிதிரண்டு ஆவேச முழக்கம் எழுப்ப வாருங்கள் என இருகரம் கூப்பி அழைக்கிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK general secretary Vaiko said that demanding justice for the Sri Lankan Tamil, a protest would be organised worldwide on February 26. “Protest would also be held outside the residence of British Prime Minister David Cameron and other leaders.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X