போனியை நம்பாமல் காதலுக்கு ஓகே சொல்ல நீண்ட காலம் எடுத்த ஸ்ரீதேவி.. ஒரு ரீகேப் !
பல்வேறு தடைகளையும் தாண்டி ஸ்ரீதேவியும் போனி கபூரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
Recommended Video
சென்னை: ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் சர்ச்சைக்குரிய காதலும் 20 ஆண்டுகள் மகிழ்ச்சியான வாழ்வும் குறித்து ஒரு பிளாஷ்பேக்.
தென்னிந்தியாவில் கொடி கட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவி வடக்கிலும் சென்று ஒரு கலக்கு கலக்கினார். லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட அவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
அவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரு மகள்கள் உண்டு. இத்தகைய இனிய வாழ்வு வாழ்ந்து வந்த ஸ்ரீதேவி துபாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவர்களின் காதல் குறித்து முன்னர் இருவரும் பகிர்ந்து கொண்ட நினைவுகள் குறித்து ஒரு பிளாஷ்பேக்.
முயற்சிகள் வீணாகவில்லை
ஸ்ரீதேவியும் போனி கபூரும் பல்வேறு தடைகளை தாண்டி காதல் கதையாக மாறியது. எனினும் அதற்கான முயற்சிகள் வீணாகவில்லை. கடந்த சனிக்கிழமை இரவு வரை 20 ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் மகிழ்ச்சியான திருமண வாழ்வை வாழ்ந்தனர்.
ஸ்ரீதேவி மீது காதல்
ஸ்ரீதேவியுடனான காதல் வயப்பட்டபோது போனி கபூர் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில் 1970-களில் இருந்து ஸ்ரீதேவி நடித்த படங்களை பார்த்து விட்டு அவர் மீது எனக்கு காதல் ஏற்பட்டது. சென்னையில் அவரை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றேன். ஆனால் அவர் அங்கு இல்லை, படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் சென்றுவிட்டார். இதனால் மனவேதனையுடன் மும்பை திரும்பினேன்.
ரூ.10 லட்சம் கேட்டார்
ஸ்ரீதேவி நடித்து 1979-இல் வெளிவந்த சோல்வா சவான் படத்தை பார்த்து விட்டு அவரை படப்பிடிப்பில் சந்தித்து ஒரு படத்தில் புக் செய்வதற்காக சென்றேன். ஆனால் கூச்சம் சுபாவம் உள்ள ஸ்ரீதேவி என்னை அவரது தாயை அணுகுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது மிஸ்டர் இந்தியா படத்துக்காக ரூ. 10 லட்சத்தை ஊதியமாக அவரது தாய் கேட்டார். நான் ரூ.11 லட்சம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டேன். இதனால் அவரது தாய் என்னால் ஈர்க்கப்பட்டார்.
சிறப்பான கவனிப்பு
மிஸ்டர் இந்தியா படம் எடுக்கப்பட்டபோது நானே அவரை அக்கறையுடன் பார்த்துக் கொண்டேன். சூட்டிங்கில் அவர் எவ்வித கஷ்டங்களையும் அனுபவிக்காததை உறுதி செய்து கொண்டேன். தனியாக அவருகென்று மேக்கப் அறையை உருவாக்கிக் கொடுத்தேன் என்றார்.
முதல் மனைவியிடம் தகவல்
இந்த காலகட்டத்தில் போனி கபூருக்கு மோனா கபூர் என்பவருடன் திருமணமாகி அர்ஜுன் கபூர் மற்றும் அன்ஷுலா கபூர் ஆகிய குழந்தைகள் இருந்தனர். இருந்த போதிலும் ஸ்ரீதேவி மீது போனி கபூருக்கு காதல் ஏற்பட்டது. சாண்டினி படப்பிடிப்புக்காக ஸ்விட்சர்லாந்து சென்ற ஸ்ரீதேவியுடன் போனி கபூரும் சென்றார். திரும்பி வந்ததும், ஸ்ரீதேவியுடனான காதல் குறித்து மோனா கபூரிடம் தெரிவித்தார்.
ஸ்ரீதேவி மீது புகார்
ஸ்ரீதேவியின் காதலால்தான் போனி- மோனா இடையேயான திருமண உறவு முறிந்ததாகவும் பேசப்பட்டது. போனி கபூருடனான காதல் குறித்து ஸ்ரீதேவி ஒரு பேட்டியில் கூறுகையில் எனது கனவு நாயகன் போனி என்பதை உணர எனக்கு இத்தனை காலம் பிடித்தது. அவரை பற்றி தெரிந்ததும் நானும் காதலிக்க ஆரம்பித்தேன். நான் போனி கபூருக்குத்தான் என்பது இறைவன் போட்ட முடிச்சு என்பதை உணர்வதற்கே நான் அதிக காலம் எடுத்துக் கொண்டேன். என் மனதை நான் எப்போதும் நம்புவேன் என்று கூறியிருந்தார்.
1996-இல் திருமணம்
இத்தனை தடைகளையும் தாண்டி 1996-இல் போனி கபூரும் ஸ்ரீதேவியும் திருமணம் செய்து கொண்டனர். 20 ஆண்டுகால இனிமையான திருமண பந்தத்திலிருந்து ஸ்ரீதேவியை காலன் கடந்த சனிக்கிழமை பிரித்து கொண்டு சென்றுவிட்டான்.