தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல்- இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!!
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி மீண்டும் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது கட்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 நாள்களுக்கு முன்பு தனுஷ்கோடிக்கும், கச்சதீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையைச் சேர்ந்த வீரரை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜோவின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டு நல்லடக்கம் செய்தனர்.
இந்நிலையில் வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் சுமூகநிலை எட்டப்படவில்லை எனில் அடுத்த கட்ட முடிவு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
கடந்த 11 நாள்களுக்கு பிறகு, ராமேஸ்வரத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டு இருந்த மீனவர்களை ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படை கற்களை வீசியும், தடிகளை கொண்டும் தாக்கினர். மேலும் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியும் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கரைக்கு திரும்பினார். இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்வதாகவே கரை திரும்பிய மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.