ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தல்: தேர்தல் அதிகாரி நியமனம்... விரைவில் தேர்தல்?
சென்னை: காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக மனோகரனை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜெயலலிதா தனது எம்.எல்.ஏ பதவியை இழந்தார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானது.
சுமார் இரண்டு மாதங்களுக்கு பிறகே, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது என தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையமும், ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக மனோகரனை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா இன்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அநேகமாக டெல்லி சட்டமன்ற சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புடன் சேர்த்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.