விஜயகாந்தை தேடிப் போய் ஆசீர்வாதம் வழங்கிய ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்
தேமுதிக தலைவர் விஜயகாந்தை சென்னையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சந்தித்து ஆசீர்வாதம் வழங்கினார்.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை சென்னையில் நேரில் சந்தித்து ஆசீர்வாதம் வழங்கியுள்ளார் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம்.
ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் என அறிவித்திருந்தார் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம். ஆனால் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தை ஜீயர் கைவிட்டார்.
இதையடுத்து வைரமுத்துவுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற ஜீயர், எங்களுக்கும் சோடாபாட்டில் வீச தெரியும் என பேசியது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து தாம் பேசியது தவறு என ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்டுவிட்டேன் என அறிவித்தார் ஜீயர்.
மேலும் ஆண்டாள் சந்நிதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என அறிவித்திருந்தார் ஜீயர். ஆனால் திடீரென பக்தர்களுடன் ஆலோசித்து உண்ணாவிரதம் தொடங்குவேன் என பல்டி அடித்தார் ஜீயர்.
இந்நிலையில் சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் வழங்கினார் ஜீயர். தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தை சந்தித்து ஆசீர்வாதம் வழங்கிய ஜீயர், நீங்கள் நினைத்தது எல்லாம் விரைவில் நடக்கும் என கூறியுள்ளார்.