மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறார் நிர்மலா சீதாராமன்... ஸ்டாலின் கண்டனம்!
ராமேஸ்வரத்தில் குண்டடிபட்ட மீனவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளான ராமேஸ்வரம் மீனவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறியதாவது : ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தவில்லை என்று கூறியுள்ளார்.
அதோடு நின்றுவிடாமல் மீனவர்கள் காட்டிய ரப்பர் குண்டு இந்திய கடற்படைக்கு சொந்தமானது அல்ல என்றும் அமைச்சர்நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் குண்டடி பட்ட மீனவர்களின் உணர்வை கொச்சைப்படுத்தும் வகையில் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். இதனை மிகுந்த வேதனையோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆட்சியில் ஜெயலலிதா இறந்த பின்னர் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் அலுவலகம், வீட்டில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. அதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இதுவரை தெரியவில்லை. அதன் பின்னர் குட்கா புகழ் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது.
அந்த சோதனையின் போது கிடைத்த ஆவணங்களில் முதல்வர், அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போல டிஜிபி, அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா விவகாரத்தில் விசாரணை நடத்தி வழக்கு போட வருமான வரி சொன்னது அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.
நத்தம் விஸ்வநாதன், அன்புநாதன், மணல் மாஃபியா சேகர் ரெட்டி உள்ளிட்டோரின் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடந்துள்ளது. இதெல்லாம் என்ன ஆனது. உண்மையில் என்ன நடந்தது என்று விளக்கம் வரட்டும் அதன் பிறகு போயஸ்கார்டனில் நடந்த வருமான வரி சோதனை பற்றி கருத்து கூறுகிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.