தமிழகத்தை ஆளும் கட்சி நாங்கதான்... மு.க.ஸ்டாலின் அதிரடி
செங்கல்பட்டு: தமிழகத்தில் ஒரு ஆளுங்கட்சி போல திமுக செயல்பட்டு வருகிறது. ஆளுங்கட்சி செய்ய வேண்டியதை எல்லாம் திமுகதான் செய்து கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக ஆட்சிப் பொறுப்பில் இல்லை என்றாலும் கூட, எதிரக்கட்சியாக இருந்தாலும் கூட தமிழகத்தை திமுகதான் ஆண்டு வருகிறது. ஆளுங்கட்சி செய்ய வேண்டியதை திமுகதான் செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
தமிழகத்தில் நடப்பது செயல்படாத ஆட்சி. தேர்தலில் நாம் தோற்றாலும், ஆட்சி பொறுப்புக்கு வரமுடியாத அளவுக்கு எம்.எல்.ஏ.க்களை பெற முடியாவிட்டாலும் இன்றைக்கு பிரதான எதிர்கட்சியாக அதிக எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ.க்களுடன் அமர்ந்து இருக்கிறோம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோவிலில் நடந்த பல்வேறு கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார். அவரது பேச்சிலிருந்து:
ஆள்வது நாம்தான்
நாம் ஆட்சி பொறுப்பில் இல்லை என்ற போதிலும், எதிர்கட்சியாக இருந்தும் தமிழகத்தை ஆள்வது திமுக தான். இதில் மாற்று கருத்து இல்லை. இன்றைக்கு ஆளுங்கட்சி செய்ய வேண்டியதை திமுக செய்கிறது. 25ம் தேதி அனைத்து கட்சிக்கூட்டத்தை நாம் கூட்ட இருக்கிறோம்.
செயல்படாத அதிமுக ஆட்சி
தமிழகத்தில் நடப்பது செயல்படாத ஆட்சி. தேர்தலில் நாம் தோற்றாலும், ஆட்சி பொறுப்புக்கு வரமுடியாத அளவுக்கு எம்.எல்.ஏ.க்களை பெற முடியாவிட்டாலும் இன்றைக்கு பிரதான எதிர்கட்சியாக அதிக எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ.க்களுடன் அமர்ந்து இருக்கிறோம்.
வரலாறு நமக்கு மட்டும்தான்
தமிழகம் எத்தனையோ தேர்தல் களத்தை சந்தித்து இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி தொடங்கி, திமுக, அதிமுக ஆட்சி நடைபெற்றுள்ளது. ஆனால் அதிக பெரும்பான்மையுடன் 184 இடங்களை பெற்று 1971ல் ஆட்சியை பிடித்தது திமுக இதுபோன்ற வெற்றியை எந்த கட்சியும் பெற்றது இல்லை. எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும் அவ்வளவு பெரிய தோல்வியையும் தழுவி இருக்கிறோம். இந்த சாதனையும் நமக்கு மட்டும் தான் உண்டு.
ஏன் கட்சி தாவுகிறார்கள்
ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவுகிறார்கள் என்றால், அதற்கு என்ன காரணம்? அந்த கட்சியின் செயல்பாடு பிடிக்காமல் இருக்கலாம். அந்த கட்சியால் மக்களுக்கும், தனக்கும் நன்மை ஏற்படாது என்று எண்ணி இருக்கலாம். இதுபோன்று பல காரணங்கள் இருக்கலாம். பொதுவாக, ஒரு கட்சியில் இருந்து விலகி மற்றொரு கட்சிக்கு போக வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆளுங்கட்சியை தான் தேர்ந்தெடுப்பார்கள். ஏனென்றால் அங்கு தான் அதிகாரமும், செல்வாக்கும் இருக்கும். ஆனால் எதிர்கட்சியான தி.மு.க.வை தேடி வருகிறார்களே ஏன்? என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.
மீண்டும் ஆட்சிக்கு வருவோம்
1957ல் தான் திமுக தேர்தல் களத்தை சந்தித்தது. படிப்படியாக மக்களின் மதிப்பை பெற்று ஆட்சியையும் பிடித்தது. இடைப்பட்ட காலத்தில் திமுக, அதிமுக ஆட்சிகள் மாறி மாறி வந்தாலும் கடந்த 5 ஆண்டில் நாம் ஆட்சியில் இல்லை. 2016ல் நடந்த தேர்தலில் நாம் ஆட்சியில் இல்லை. இன்னும் 5 ஆண்டுகளிலோ அல்லது அதற்கு முன்போ தெரியவில்லை, நாம் ஆட்சிக்கு வருவோம்.
பூதாகரப் பிரச்சினைகள்
இன்றைக்கு விவசாயிகள் தற்கொலை செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். நம்மை சுற்றி பாலாறு, முல்லை பெரியாறு, காவிரி பிரச்சினை இருக்கிறது. தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் போர் ஏற்படும் அளவுக்கு பிரச்சினை உருவாகி இருக்கிறது. கருணாநிதி முதல்வராக இருந்த போது காவிரி பிரச்சினை பூதாகரமாக இருந்தது இல்லை.
எண்ணிப் பாருங்கள்
அண்டை மாநில முதல்வர்களுடன் நல்ல நட்பு வைத்திருந்தார். ஓரளவுக்கு நமக்கு தண்ணீரும் கிடைத்தது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டும், சட்டப்படி நடவடிக்கையும் எடுத்தார். அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டினார். ஆனால் இன்றைக்கு எத்தனை முறை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருப்பார்கள் என்பதை எண்ணி பாருங்கள் என்றார் ஸ்டாலின்.