"அமித்ஷாவிடமும் அதே நடிப்பு.. தனியாக காலில் விழுந்தாரான்னு தெரியல".. எடப்பாடி மீது ஸ்டாலின் அட்டாக்!
சென்னை: "சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அறிவித்தபோது, எப்படி எல்லாம் ஆக்ஷன் செய்தாரோ அதே மாதிரி அமித்ஷா அருகிலும் நடித்தார். என்ன.. காலில் மட்டும்தான் விழவில்லை! அதையும் தனியாக செய்தார்களா என்று நமக்கு தெரியவில்லை" என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பேசியுள்ளார்.
மதுரை உத்தங்குடியில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சிக் கொடியை ஏற்றி, பொதுக்குழுக் கூட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின். தொடர்ந்து, இந்தக் கூட்டத்தில் 27 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஸ்டாலின் பேச்சு
அதனைத் தொடர்ந்து இந்தப் பொதுக்குழுவில் உரையாற்றிய ஸ்டாலின், அதிமுகவையும் பாஜகவையும் சரமாரியாக விமர்சித்துள்ளார். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை காட்டமாக வறுத்தெடுத்துள்ளார் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "திமுக இருக்கும் வரை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! தடம் மாறாத கொள்கையைக் கொண்டுள்ளதால் எந்த கோமாளி கூட்டத்தாலும் நம்மை வெல்ல முடியவில்லை. இனியும் வெல்ல முடியாது.
நேரேடிவ் செட் செய்வார்கள்
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கிறது. அதனால், வழக்கத்தை விட அதிகமாக, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக திமுக ஆட்சிக்கு எதிராக, அவதூறு அம்புகளை மக்கள் மத்தியில் எதிராளிகள் வீசுவார்கள். கருத்துக் கணிப்பு என்ற பெயரில் மக்கள் மனதில் பொய்யை விதைக்க முயற்சிப்பார்கள்.
சமூக ஊடகங்கள் மூலமும், விதைப்பார்கள். இதையெல்லாம் முறியடிக்க நாம் தயாராக வேண்டும். அவர்கள் ஒரு நேரேட்டிவ் செட் செய்ய நினைத்தால், நாம் அவர்களைவிட ஒரு படி முன்னால் இருக்க வேண்டும். அவர்களின் பொய்களுக்கு முன்னால், நம்முடைய உண்மை மக்களிடம் சென்று சேர வேண்டும்..
பாஜகவிடம் சரண்
எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி என்ன நினைத்தார்? நம்முடைய கூட்டணி பிரிய வேண்டும் என்று நினைத்தார். அதற்காக, என்னென்ன கதைகளையோ உருவாக்கினார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.கவுடன் பிரிந்த மாதிரி நடித்தால், நம்முடைய கூட்டணி உடையும் என்று நினைத்தார்கள். ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை. அதனால்தான், இப்போது டெல்லிக்குச் சென்று, பல கார்களில் மாறிமாறி, அமித்ஷாவை சந்தித்து, மீண்டும் பா.ஜ.க.விடம் சரணடைந்துவிட்டார்.
என்ன ஒரு நடிப்பு
அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை அமித்ஷா அறிவித்தபோது ஒரு வார்த்தைகூட பேசாமல், பவ்யமாக பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். என்ன ஒரு அடக்கம்? சசிகலா இவரை முதலமைச்சராக அறிவித்தபோது, எப்படி எல்லாம் ஆக்சன் செய்தாரோ அதே மாதிரி நடிப்பு! என்ன... காலில் மட்டும்தான் விழவில்லை! அது தனியாக செய்தார்களா என்று நமக்கு தெரியவில்லை.
பாஜகவின் கண்ட்ரோலில் அதிமுக
நாம் கேட்பது... ஒரு மாநிலத்தில், ஒரு கூட்டணிக்கு யார் தலைமை வகிக்கிறார்களோ, அவர்கள்தான் கூட்டணியை அறிவிப்பார்கள். ஆனால், இங்கு அமித்ஷா அறிவிக்கிறார். இதிலிருந்தே இவர்கள் லட்சணத்தை நாம் புரிந்து கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு சென்றிருக்கிறது அ.தி.மு.க.
அடுத்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்லத்தான் பழனிசாமி துடிக்கிறார். அதனால்தான் அமித்ஷா இங்கு அடிக்கடி வருகிறார்! நான் ஏற்கனவே சொன்னதுதான், மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன், எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே 'out of control'-தான். இதை மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும்" என்று பேசியுள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications