நான் ஆட்டோகாரன்... ஆட்டோகாரன்.... திமுகவின் மனிதசங்கிலியை "ஓபன் ஆட்டோவில்" பார்த்த ஸ்டாலின்
மத்திய அரசுக்கு எதிராக திமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்திய போது புரசைவாக்கத்தில் இருந்து கொளத்தூர் வரை ஆட்டோவில் பயணித்தார் ஸ்டாலின்.
சென்னை: நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தில் எதிர்க்கட்சியான தி.மு.க., ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் இந்த போராட்டம் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. சென்னையில் பல பகுதிகளில் மனிதச்சங்கிலி நடைபெற்றது. புரசைவாக்கத்தில் இருந்து ஓட்டேரி, பெரம்பூர் வழியாக கொளத்தூர் வரை தி.மு.க.வினர் சாலையோரம் கைகோர்த்து மனிதச் சங்கிலி அமைத்து நின்றனர்.
ஆட்டோவில் ஸ்டாலின்
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின், புரசைவாக்கம் டவுட்டன் அருகே போராட்டத்தை தொடங்கிவைத்தார். பின்னர், திறந்தவெளி ஆட்டோவில் நின்றபடி, மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்ற வழியாக சென்று அதில் பங்கேற்ற திமுக தொண்டர்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார்.
தொண்டர்கள் உற்சாகம்
பெரம்பூர் பேப்பர் மில் சாலையில், திமுக தொண்டர்களுடன் மனிதச்சங்கிலியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் அதே ஆட்டோவில் கொளத்தூர் வரை சென்றார்.
அவரைப் பார்த்து ஏராளமான தொண்டர்கள் கையசைத்தனர்.
லோக்பால் அமைப்பு
5 மணிக்கு மனிதசங்கிலி முடிந்த உடன் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று எந்நேரமும் ஆர்வம் காட்டுவதாகக் கூறும் மத்திய அரசு, லோக்பால் அமைப்பை ஏன் இன்னும் ஏற்படுத்தவில்லை? என்று பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறது உச்சநீதிமன்றம். அதிமுக ஆட்சியில் தாண்டவமாடும் ஊழலைக் காணும் அனைத்து ஊழல் ஒழிப்பு ஆர்வலர்கள் மத்தியிலும் உச்சநீதிமன்றத்தின் இந்தக் கேள்வி தமிழகத்தில் உள்ள அதிமுக அரசின் தலை மீது வைத்த குட்டு என்றே எண்ணப்படுகிறது என்றார்.
மிகப்பெரிய போராட்டங்கள்
லோக்பால் அமைப்பு உருவாக்குவதற்காக காந்தியவாதி அன்னா ஹசாரே, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, தற்போது புதுவை மாநில ஆளுநராக இருக்கும் மாண்புமிகு கிரண்பேடி, உச்சநீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷண் ஆகியோர் நடத்திய போராட்டமும் அதையொட்டி நிகழ்ந்த போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் அனைத்தும் நாட்டில் ஊழல் ஒழிப்பில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே.
ஊழல் புகார்கள்
இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை ஊழலை முற்றிலுமாக துடைத்தெறியத் தேவையான லோக்பால் அமைப்பு உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என்று வலியறுத்தினார்கள். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் ஆகியோர் மீது கூறப்படும் ஊழல் புகார்களை விசாரிக்க தமிழகத்தில் முதன்முதலில் பொது வாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்ற தடுப்புச் சட்டம் கொண்டு வந்து 5.4.1973 அன்று தமிழக சட்டமன்றம் மற்றும் மேலவை ஆகிய இரு அவைகளிலும் நிறைவேற்றிய கருணாநிதியும், மத்தியில் லோக்பால் அமைப்பு உருவாகவும், மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்தவும் பேராதரவு தெரிவித்தார்.
பிரதமரை விசாரிக்கும் அமைப்பு
திமுக ஆட்சியில் முதலமைச்சரையும் விசாரிக்கும்வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம்போல், பிரதமரையும் விசாரிக்கும்வகையில் லோக்பால் சட்டம் இருக்க வேண்டும் என்றே அன்று, கழகத்தின் சார்பில் தலைவர் கலைஞர் கோரிக்கை விடுத்தார் என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எப்படி லோக்பால் அமைப்பு தேவையோ, அதே மாதிரி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு லோக் அயுக்தா அமைப்பு இன்றியமையாதது.
பொது வாக்கெடுப்பு
பொது வாழ்வில் தூய்மையை நிலைநாட்டவும், அப்பழுக்கற்ற அரசு நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்கவும் உச்சநீதிமன்றத்தின் இந்த கண்டனத்துக்குப் பிறகாவது ‘லோக்பால்' அமைப்பை உடனடியாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பழைய ரூபாய் 500, 1,000 ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்கு அளிக்கப்பட்ட சலுகைகள் முடிவதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொது வாக்கெடுப்பு நடத்தி, அந்தச் சலுகைகளை 31.3.2017 அன்று வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
லோக் அயுக்தா அமைப்பு
லோக்பால் விஷயத்தில் மத்திய அரசுக்குத்தானே உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது என்று அலட்சியமாக இருக்காமல், தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பை உடனடியாக அதிமுக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக துணை நிற்கும்
28ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள போராட்டமானது திமுக அறிவித்த போராட்டமில்லை என்றாலும், மத்திய அளவில் இருக்கக்கூடிய, இந்திய அளவில் இருக்கக்கூடிய எல்லா எதிர்க்கட்சிகளும் இணைந்து நடத்தக் கூடிய போராட்டம். அந்த போராட்டத்திற்கு திமுகவும் துணை நிற்கும் என்றார் ஸ்டாலின். மனித சங்கிலி போராட்டத்தை தொடக்கி வைத்த ஸ்டாலின் ஆட்டோக்காரன் பாணியில் அதை பார்வையிட்டது சமூக வலைத்தளங்களில் வைரலானது.