கொடைக்கானல், கரூர், கும்பகோணம் நகராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு: ஜெயலலிதா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடிப்படை வசதிகளை மேம்படுத்த கொடைக்கானல், கரூர், கும்பகோணம் நகராட்சிகளுக்கு நிதி உதவி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதுகுறித்து கூறியுள்ளதாவது:

நகர்ப்புறங்களில் ஆரோக்கியமான சுற்றுச் சூழலை உருவாக்குதிலும், பொது சுகாதாரத்தை பேணிப் பாதுகாப்பதிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீரினை வழங்குவதிலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திட்டங்களை தீட்டிச் செயல் படுத்துவதிலும் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.

சுற்றுலா தலமான கொடைக்கானல்

சுற்றுலா தலமான கொடைக்கானல்

சுற்றுலாத் தலமாக விளங்கும் கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த மூன்று ஆண்டுகளில், 27 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள் அமைத்தல், தெருவிளக்குகள் பொருத்துதல், திடக்கழிவு மேலாண்மை பணிகள் என 132 அடிப்படை வசதிப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

கீழ்குண்டாறு குடிநீர் திட்டம்

கீழ்குண்டாறு குடிநீர் திட்டம்

கொடைக்கானல் நகராட்சியில் 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்த எனது தலைமையிலான அரசால் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது, அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படும். கொடைக்கானல் நகர மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 43 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான கீழ்குண்டாறு குடிநீர் திட்டம் என்னால் அறிவிக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

சுற்றுலா பயணிகள் வசதிக்காக..

சுற்றுலா பயணிகள் வசதிக்காக..

கொடைக்கானல் நகராட்சியில் அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்திற் கொண்டு, பொதுமக்களுக்கு மேலும் பல்வேறு அடிப்படை வசதி களை ஏற்படுத்தி தருவதென எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

88 கோடியில் ஏரி அழகுபடுத்தப்படும்

88 கோடியில் ஏரி அழகுபடுத்தப்படும்

இதன்படி, கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் வகையில், 87 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொடைக்கானல் ஏரி அழகு படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தின் கீழ் ஏரியினை தூர்வாருதல், ஆகாயத் தாமரை மற்றும் தேவையற்ற நீர் தாவரங்களை அப்புறப்படுத்துதல், நீரில் உள்ள ஆக்ஸிஜன் தன்மையினை அதிகரித்தல், மீன் வளர்ப் பிற்கு தேவையான தகுந்த சூழ்நிலையினை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் பல வசதி

மேலும் பல வசதி

மேலும், ஏரியினை சுற்றிலும் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் வெளியேற்றுதல், கழிவு நீர் மேலாண்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை, பூங்கா அமைத்தல், வாகன நிறுத்தம் அமைத்தல், சாலை வசதியினை மேம்படுத்துதல், அலங்கார தாவரங் களை அமைத்தல், வண்டல் படிவுகளை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகளும் மேற் கொள்ளப்படும். இவை மட்டுமின்றி, படகு குழாம் களை முறைப்படுத்தி அழகுப் படுத்துதல், ஏரியின் எழில் தோற்றத்தினை மேம்படுத்துதல், சுற்றுலா தகவல் மையம், சைக்கிள் நிறுத்துமிடம் போன்ற வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும்.

கோயில் நகரம் கும்பகோணம்

கோயில் நகரம் கும்பகோணம்

கோயில்கள் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணம் நகராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில், 35 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், சாலைகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் இதரப் பணிகள் என 234 அடிப்படை வசதிப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

தெருவிளக்கு பணிகள்

தெருவிளக்கு பணிகள்

இதன் தொடர்ச்சியாக, கும்பகோணம் நகரில் நடை பெறவுள்ள மகாமகம் பெரு விழாவையட்டி இந்நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில், 2 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர்ப் பணிகளும், 5 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெருவிளக்கு அமைக்கும் பணிகள் மற்றும் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தேரோடும் வீதி மேம்பாடு

தேரோடும் வீதி மேம்பாடு

மேலும், 10 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணிகள், 1 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேரோடும் வீதி மேம்பாட்டுப் பணிகள் மற்றும் 1 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார சந்துகளை மேம்பாடு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ.43.78 கோடியில் பணிகள்

ரூ.43.78 கோடியில் பணிகள்

இதுமட்டுமல்லாமல், 11 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திடக் கழிவு மேலாண்மை திட்டம், 80 லட்சம் ரூபாய் மதிப்பீட் டில் கழிவறைகளை மேம் படுத்தும் பணிகள், 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலக்காவேரி ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைத்தல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும். மொத்தத்தில் 43.78 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கரூர் நகராட்சி

கரூர் நகராட்சி

கரூர் நகராட்சியில், கடந்த மூன்று ஆண்டுகளில் 108 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக் கழிவு மேலாண்மை பணி கள், பூங்காக்கள் என 608 அடிப்படை வசதிப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன. கரூர், இனாம் கரூர் மற்றும் தாந்தோணி பகுதிகளுக்கு ஜெர்மானிய மேம்பாட்டு வங்கியின் நிதியுதவியுடன் 68 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் செயலாக்கத்தில் உள்ளன.

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

கரூர் நகரின் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரி சலை சமாளிக்க பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருவதென எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, கரூர் நகராட்சியில், குளத்துப்பாளையம் - ஈரோடு --கரூர் இருப்புப்பாதையில் 3 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். இப்பணி, தென்னக ரயில்வே மூலம் செயல்படுத்தப்படும். மேலும், இந்த சுரங்கப்பாதைக்கான அணுகு சாலை அமைக்கும் பணி 3 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும்.

சர்வீஸ் ரோடு

சர்வீஸ் ரோடு

கரூர் நகராட்சியில் வடக்கு பசுபதி பாளையத்தில், திருச்சி மற்றும் கரூர் திண்டுக்கல் இருப்புப்பாதையில் 3 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். இப்பணி, தென்னக ரயில்வே மூலம் செயல்படுத்தப்படும். மேலும், இந்த சுரங்கப்பாதைக்கான அணுகு சாலை அமைக்கும் பணி 2 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும்.

அடிப்படை வசதிகள் கிடைக்கும்

அடிப்படை வசதிகள் கிடைக்கும்

மேற்காணும் நடவடிக்கைகள், கொடைக்கானல், கும்பகோணம் மற்றும் கரூர் நகராட்சிகளைச் சார்ந்த மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட அடிப் படை வசதிகள் கிடைத்திடவும், ஆரோக்கியமான சுற்றுசூழல் நிலவவும் வழிவகுக்கும் என் பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+