கொள்கை முடிவு எடுத்துதான், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது... நீதிமன்றத்தில் தமிழக அரசு பரபர பதில்
ஸ்டெர்லைட் ஆலை கொள்கை முடிவு எடுத்த பின்னர்தான் மூடப்பட்டது என தமிழக அரசு உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.
மதுரை: ஸ்டெர்லைட் ஆலை கொள்கை முடிவு எடுத்த பின்னர்தான் மூடப்பட்டது என தமிழக அரசு உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதனை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் தடியடி நடத்தினர்.
பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கடந்த மே மாதம் 28ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பின்னர் ஆலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தார்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை தெளிவற்று இருப்பதாக கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வு அதிருப்தி தெரிவித்தனர். தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெளிவு இல்லை, எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை வெளியிட வேண்டும் என்று தெரிவித்தது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை கொள்கை முடிவு எடுத்துதான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்மட்ட அதிகாரிகளிடையே கொள்கை முடிவு எடுத்த பின்னரே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் தொடர்பான அனைத்து வழக்கு விசாரணையும் ஜூலை 11ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.