ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடியில் 46-வது நாளாக இரவிலும் போராட்டம் நீடிப்பு
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடியில் நடைபெறும் மக்களின் போராட்டம் 46வது நாளாக நீடிக்கிறது.
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி 46 நாட்களாக நடைபெற்று வரும் தூத்துக்குடி மக்களின் எதிர்ப்பு போராட்டம் 46வது நாளாக இரவிலும் நீடிக்கிறது. தங்களது கோரிக்கைக்காக மக்கள் போராட்ட பந்தலிலேயே சமைத்து சாப்பிட்டு குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் இருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும் கழிவுகள் காரணமாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 46-வது நாளாக நீடிக்கும் போராட்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவையும் பொருட்படுத்தாமல் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர். போராட்டப் பந்தலிலேயே சமைத்து சாப்பிட்டு விட்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர். ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மக்களின் போராட்டம் வலுப்பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications