இணைந்தாலும்.. இப்பவும் அதிமுக 2 தான்!
சென்னை: அதிமுக அணிகள் இணைந்து ஒன்றாகி விட்டது என்று கூறப்பட்டாலும் கூட இன்னும் ஒரு குழப்பம் தீராமல்தான் உள்ளது. ஆனால் இது புதுக் குழப்பம்.
அதிமுக இரண்டாக பிளவுபட்டு இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு முன்பாக இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சசிகலா - தினகரன் அணிக்கு அதிமுக அம்மா என்றும், ஓ.பி.எஸ். தலைமையிலான அணிக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா என பெயரிடப்பட்டது.
அதன் பின்னர் காலத்தின் இன்னொரு கொடுமையாக முதல்வர் எடப்பாடியாருக்கும், தினகரனுக்கும் இடையே முட்டல் ஏற்பட்டது. இருவரும் தனித் தனியாக செயல்பட ஆரம்பித்தனர்.

முறைப்படி பிரியவில்லை
தனித் தனியாக செயல்பட்டனரே ஒழிய, இருவரும் பிரிந்து போகவில்லை. உடைந்தும் போகவில்லை. புதிதாக எந்தக் கட்சியும் உருவாகமும் இல்லை. உள்ளுக்குள் குட்டிக் கலாட்டாக்கள் நடந்து வந்தன.

இன்று இணைப்பு
இந்த நிலையில்தான் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியினர் எடப்பாடியாருடன் கை கோர்த்துள்ளனர். ஆனால் இவர்கள் தினகரன் தரப்பை ஓரம் கட்டியுள்ளனர்.

இது என்ன மாதிரியான இணைப்பு
தேர்தல் ஆணையக் கணக்கின்படி சசிகலா - தினகரன் தலைமையிலான அதிமுக அம்மா மற்றும் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவி அம்மா என இரு கட்சிகள்தான் உள்ளன. அந்த வகையில் பார்த்தால் முறைப்படி தினகரன் தரப்புடன்தான் ஓபிஎஸ் அணி இணைந்திருக்க வேண்டும்.

குழப்பம் நீடிக்கும்
ஆனால் மாறாக, எடப்பாடியாருடன் இணைந்திருப்பதால் இது எந்த வகையான இணைப்பு என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் மீண்டும் இரு அணிகளாகவே அதிமுக நீடிக்கும் நிலையும் தொடர்கிறது.












Click it and Unblock the Notifications