நாகர்கோவிலில் முழுஅடைப்பு... அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு!
கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் அருகே 2 அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு நடந்துள்ளது.
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் நாகர்கோவிலில் 2 அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நவம்பர் மாத இறுதியில் கன்னியாகுமரியை தாக்கிய ஓகி புயலின் சுவடுகள் இன்னும் மாவட்டத்தைவிட்டு மறையவில்லை. குமரி மாவட்டத்திற்கு கூடுதல் நிவாரணம் பெற தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில் ரப்பர், வாழை விவசாயிகளுக்கு இழப்பீட்டிற்கு ஏற்ப நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து சற்று மந்தமாகவே உள்ளது. இந்நிலையில்
நாகர்கோவில் அண்ணா பேருந்துநிலையத்தில் பஸ் இயங்காததால் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது போலீசார் பேச்சுவார்த்தை அடுத்து பயணிகள் கலந்து சென்றனர்.
நாகர்கோவில் அருகே கட்டையன்விளை,நேசமணிநகர் அருகே இரண்டு அரசு பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டதால் பேருந்து பாதியிலேயே நின்றது. இதே போன்று மார்த்தாண்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட வழி தடங்களில் இயக்கிய அரசு பேருந்து மீது கல் வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.