இன்று மருந்துக் கடைகள் அடைப்பு... மக்கள் கேட்டால் கடையைத் திறந்து மருந்து தர உத்தரவு!
சென்னை: மருந்து வணிகர்கள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
ஆனாலும் பொதுமக்கள் கேட்டால் கடைகளை திறந்து மருந்துகள் வழங்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆன்-லைன் மருந்து விற்பனையை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் இன்று (புதன்கிழமை) நாடு தழுவிய அளவில் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
நாடு முழுவதும் 8 லட்சம் மருந்து கடைகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன. தமிழகத்தில் 40 ஆயிரம் மருந்து கடைகளும், சென்னையில் 5 ஆயிரம் மருந்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து கடைகள் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியமான மருந்துகள் கிடைக்காமல் போய்விட கூடும் என்பதால், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அப்துல்காதர் ஆகியோர் மருந்து வணிகர்கள் சங்கத்தினரை அழைத்து நேற்று தலைமைச்செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய கூடாது என்ற எங்களின் கோரிக்கையை தமிழக அரசும் ஆமோதிக்கிறது. எங்களின் உணர்வுகளை அரசு மதிப்பதால், அச்சுறுத்தலோ, மிரட்டலோ எதுவும் இல்லை. கடைகளை திறக்கவும் அறிவுறுத்தப்படவில்லை.
கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டாலும், அத்தியாவசிய மருந்துகள் தேவைப்படும் பொதுமக்களுக்கு கடைகளை திறந்து மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே மருத்துவமனையில் இருக்கும் மருந்து கடைகளை மூட வேண்டாம் என்று சங்க நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். அந்தவகையில் சென்னையில் மட்டும் 200 கடைகள் திறந்து இருக்கும்.
அத்துடன் மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்தில், மருந்து வணிகர்கள் சங்கத்தின் 60 உறுப்பினர்களின் செல்போன் எண்களை கொடுத்துள்ளோம். யாருக்கு மருந்து தேவைப்படுகிறதோ அவர்கள் உடனடியாக மருந்து கட்டுப்பாட்டு அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டால், உடனடியாக கடைகளை திறந்து மருந்துகளை வழங்கவும் தயாராக இருக்கிறோம்," என்றார்.