திருச்செந்தூரில்! வீட்டுப்பாடம் எழுதாத ஆகாஷ்! கண்டித்த ஆசிரியை! நேராக முதல் மாடிக்கு சென்று...!
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் வீட்டுப்பாடம் எழுதாததால் ஆசிரியை கண்டித்ததை அடுத்து பள்ளியின் மாடியிலிருந்து மாணவன் குதித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் பிரபாகர். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் ஆகாஷ் (14). இவர் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

ஆகாஷ் நேற்று பள்ளிக்குச் சென்றார். அப்போது அவர் வீட்டுப்பாடம் எழுதாமல் சென்றது தெரியவந்தது. வகுப்பில் ஆசிரியர் ஒவ்வொரு மாணவனின் வீட்டுப் பாடத்தையும் சரி பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆகாஷ்
அப்போது ஆகாஷின் நோட்டுப் புத்தகத்தை சோதனை செய்த போது அவர் வீட்டுப் பாடத்தை எழுதவில்லை என தெரியவந்தது. இதனால் ஆசிரியை கோபமடைந்து ஆகாஷை கண்டித்துள்ளார். மேலும் அவரை வகுப்பை விட்டு வெளியே நிற்க வைத்துள்ளார்.
மாணவர்கள்
அத்தனை மாணவர்கள் முன்பு தன்னை வகுப்பை விட்டு வெளியே நிறுத்தியது ஆகாஷுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. உடனே ஆகாஷ், முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவர்கள் அவரை மீட்டனர்.
ஆகாஷின் எலும்பு முறிவு
இதுகுறித்து பள்ளி முதல்வர், ஆகாஷின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். இதனால் பதறி அடித்த அந்த குடும்பத்தினர், திருச்செந்தூரில் தனியார் மருத்துவமனையில் ஆகாஷை அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவனுக்கு வலது கையிலும் இடுப்பிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
ஆகாஷுக்கு என்ன ஆனது
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு ஆகாஷை ஆம்புலன்ஸில் அழைத்து சென்றனர். இது குறித்து புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுக்கா போலீஸார் விரைந்து வந்து பள்ளியிலும் அந்த ஆசிரியையிடத்திலும் விசாரணை நடத்தினர். மாணவரை கண்டித்ததால் மாடியிலிருந்து மாணவன் குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவம்
இது போல் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. அதாவது தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி. இவர் சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.
ஆசிரியர் கண்டிப்பு
இவர்களது மகன் யோசுவா அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். பிப்ரவரி 27 ஆம் தேதி பள்ளியில் இருந்து கலாவதியை தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகம், யோசுவாவை யாரோ ஒரு மாணவர் அடித்துவிட்டதாக கூறி பள்ளிக்கு வருமாறு அழைத்தனர். அப்போது தான் வேலையில் இருப்பதால் மறுநாள் பள்ளிக்கு வருவதாக கலாவதி தெரிவித்தாராம்.
நடந்தது என்ன?
இந்த நிலையில் கலாவதி இரவு பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற போது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் யோசுவா வெளியே வரவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது யோசுவா, ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியர் கண்டித்ததால் யோசுவா தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். மாணவர் உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகமே காரணம் என்றும் உண்மையான காரணத்தை போலீஸாரே மறைப்பதாகவும் கூறி யோசுவாவின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications