திருச்சியை தொடர்ந்து கோவையிலும் வெடித்தது மாணவர் போராட்டம்! விவசாயிகளுக்கு ஆதரவாக மறியல்- கைது!!
திருச்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி: விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயக்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் 16வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக திருச்சியில் விவசாயிகள் நேற்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே திரண்ட மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையிலும் கைது
இதனிடையே கோவையிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் திரண்ட மாணவர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரைமணி நேரத்திற்குள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

நுழைவு வாயில் மூடல்
கோவை வஉசி மைதானம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் மைதானத்தின் நுழைவு வாயிலையும் போலீசார் இழுத்து மூடியுள்ளனர்.

தமுக்கத்திலும் போலீசார் குவிப்பு
மதுரையிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தலாம் என அஞ்சப்படுவதால் தமுக்கம் மைதானத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் கூடுகிறார்களா என்பதையும் போலீசார் தீவிமாக கண்காணித்து வருகின்றனர்.

போலீசாரின் கட்டுப்பாட்டில்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்திய அனைத்து இடங்களும் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு வளையத்தில் மெரினா
ஏற்கனவே சென்னை மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மெரினா கடற்கரை பகுதி போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது.

பொதுமக்கள் அச்சம்
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடாத வகையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் போலீசார் திடீரென குவிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications