மாட்டுக்கறி தின்றால் அடிப்பிங்களா.. ஐஐடியை முற்றுகையிட்டு புரட்சிகர மாணவர் அமைப்பு போராட்டம்
மாட்டுக்கறி விழா நடத்தியதால் ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டார். இதனைக் கண்டித்து ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு புரட்சிகர மாணவர் அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது.
சென்னை: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
இதனைக் கண்டித்து சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விழா மாணவர்களால் நடத்தப்பட்டது. இதனால் கடுப்பான ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் விழா நடத்திய சூரஜ் என்ற மாணவரை காட்டுமிராண்டித் தனமாக தாக்கினார்கள்.
சிகிச்சை மறுப்பு
இதனால் அவரது கண் பார்வையே இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் சிந்தாந்த அடிப்படையில் நடத்தப்படும் சங்கரநேத்ராலயா என்ற கண் மருத்துவமனை, பாதிக்கப்பட்ட சூரஜ் என்ற மாணவரின் கண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டது.
ஐஐடி முற்றுகை
இதனை கண்டித்து புரட்சிகர மாணவர் அமைப்பு சார்பில் சென்னை ஐஐடி வளாகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஐஐடி வளாகத்திற்கு கிண்டி வழியாக ஊர்வலமாக சென்றனர்.
எதிர்ப்பு முழக்கம்
பின்னர், அங்கு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டுக்கறி தடைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். அதிக அளவில் பெண்கள் இதில் கலந்து கொண்டு சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள்.
மறியல்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் ஐஐடி வளாகத்தில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏபிவிபி மாணவர் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இழுத்து சென்று கைது
போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சி கர மாணவர் அமைப்பினரை இழுத்துச் சென்று போலீசார் கைது செய்யப்பட்டனர். ஏபிவிபியை தடை செய்யாவிட்டாலும், படுகாயம் அடைந்துள்ள சூரஜ்ஜிற்கு முறையான மருத்துவம் வழங்கப்படாவிட்டாலும் போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.